மூன்று மாத சம்பளத்தை விட்டுக்கொடுக்கும் பிரதமர், அதிபர், அமைச்சர்கள்
தற்போதைய சிரமமான காலகட்டத்தில் சிங்கப்பூரர்களுடன் ஒன்றுபட்டு நிற்க பிரதமர், அதிபர், அமைச்சர்கள், அரசு பதவி வகிப்போர் ஆகியோர் மூன்று மாத சம்பளத்தை விட்டுக்கொடுக்கப் போவதாக துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார்.
அரசு பதவி வகிப்போர் ஒரு மாத சம்பளத்தை விட்டுக்கொடுப்பதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்று நிலவரம் மோசமாவதைத் தொடர்ந்து, அவர்கள் கூடுதலாக இரண்டு மாத சம்பளத்தை விட்டுக்கொடுப்பதாக திரு ஹெங் கூறினார்.
“அதிபர், நாடாளுமன்ற நாயகர், இரு துணை நாயகர்களும் மூன்று மாத சம்பளத்தை விட்டுக்கொடுப்பதாக என்னிடம் தெரிவித்தனர்,” என்று இன்று (மார்ச் 26) நாடாளுமன்றத்தில் மீட்சிக்கான வரவுசெலவுத் திட்டத்தை அறிவித்தபோது இதனை திரு ஹெங் சொன்னார்.
“நெருக்கடிநிலையின்போதுதான் ஒரு தேசத்தின் உண்மையான பண்புநலன் வெளிச்சத்திற்கு வரும். இதில் நாம் எல்லாரும் ஒன்றாகத்தான் உள்ளோம். சோதனைக் காலத்தில் நாம் ஒருவரை ஒருவர் கவனித்துக்கொள்ள வேண்டும்,” என்று நிதி அமைச்சருமான திரு ஹெங் விவரித்தார்.
மோசமடைந்து வரும் கொவிட்-19 நிலவரத்தை “முன்னெப்போதும் இல்லாத நெருக்கடிநிலை” என்று வர்ணித்த அவர், அசாதாரணமான நடவடிக்கைகளை அரசாங்க எடுக்க இது தூண்டியதாக சொன்னார்.