கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்த 1,400 வெளிநாட்டு ஊழியர்கள் 2 சொகுசுக் கப்பல்களில் தங்கியுள்ளனர்
கொவிட்-19 தொற்றிலிருந்து விடுபட்ட சுமார் 1,400 வெளிநாட்டு ஊழியர்கள் தற்போது இரண்டு சொகுசுக் கப்பல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மரினா பே சொகுசுக் கப்பல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் சூப்பர்ஸ்டார் ஜெமினி கப்பலில் கடந்த மாதத்திலேயே ஊழியர்கள் தங்கவைக்கப்பட்டனர். அங்கிருக்கும் மற்றொரு சொகுசுக்கப்பலான சூப்பர்ஸ்டார் அக்வேரியஸ் இம்மாதம் முதல் தேதி தயார்நிலையில் இருந்தது என சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் நேற்று (மே 14) தெரிவித்தது.
முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் கப்பல் அறைகளில் காற்று மறுசுழற்சிக்கு அனுமதிக்கப்படுவதிலை எனவும் நல்ல காற்றோட்ட வசதி இருப்பதாகவும் கழகத்தின் இயக்குநர் திருவாட்டி ஆன்னி சாங் கூறியுள்ளார்.
பாதுகாப்பான இடைவெளி அங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதுடன் ஊழியர்கள் சற்று நேரம் அறைகளைவிட்டு வெளியில் இருக்கவும் அனுமதிக்கப்படுகிறது.
ஒவ்வொரு அறையிலும் 2 ஊழியர்கள் தங்கியுள்ளனர். அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. மேலும், தினமும் உடல் வெப்பநிலை கண்காணிக்கப்படுகிறது. உடல்நலம் இல்லாதவர்களுக்குக் உடனடியாக மருத்துவ கண்காணிப்புக்கும் வகை செய்யப்பட்டுள்ளது.
இவ்விரு கப்பல்களும் ஜென்டிங் குரூஸ் லைன்ஸ் நிறுவனத்தால் இயக்கப்படுகின்றன.
அங்கிருக்கும் கப்பல் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டிருப்பதாகக் கூறிய நிறுவனம் இதுபோன்ற சேவைகளை வழங்க விருப்பம் கொண்டுள்ளதாகத் தெரிவித்தது.
ஆனால், இந்தச் சேவைக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது பற்றி நிறுவனம் எதுவும் தெரிவிக்கவில்லை.
முழுமையான செய்தியைப் படிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online