இந்தியாவில் கிருமித்தொற்று புதிய உச்சம்; ஒரே நாளில் 100,000 பேருக்கு மேல் தொற்று
அமெரிக்காவிற்குப் பின் ஒரே நாளில் நூறாயிரம் பேருக்கு மேல் கொவிட்-19 பாதிப்பு பதிவான நாடாக இந்தியா உருவெடுத்து இருக்கிறது.
அந்நாட்டின் சுகாதார அமைச்சு இன்று (ஏப்ரல் 5) காலை 8 மணிக்கு வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 103,558 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒட்டுமொத்த கிருமித்தொற்று பாதிப்பு 12,589,067 ஆனது.
சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரே நாளில் 99,181 பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டதே முந்தைய உச்சமாக இருந்தது.
குறிப்பாக, மகாராஷ்டிர மாநிலத்தில் கிருமித்தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. அங்கு மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 57,074 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, மாநிலம் முழுவதும் உணவகங்கள், கடைத்தொகுதிகள், திரையரங்குகள் வரும் 30ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும்.
தலைநகர் மும்பையில் நேற்று மட்டும் 11,206 பேரை கிருமி தொற்றியது. இதையடுத்து, இம்மாத இறுதிவரை அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
வாரயிறுதியிலும் இரவு நேரத்திலும் அங்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு விரைவில் பொது முடக்கம் அறிவிக்கப்படலாம் எனும் அச்சத்தில் அங்கு பணியாற்றி வரும் பீகார், மத்தியப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் ஆகிய வெளிமாநில ஊழியர்கள் சொந்த ஊர் திரும்பத் தொடங்கியுள்ளனர்.
இந்தியாவில் மேலும் 478 பேர் கொரோனா தொற்றால் மாண்டு விட்டனர். அவர்களில் 222 பேர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள். இதையடுத்து, கிருமித்தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை 165,101 ஆனது.