இந்தியாவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 300,000க்கும் மேற்பட்டோருக்கு கிருமித்தொற்று
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இன்று (ஏப்ரல் 24) காலை வரையிலான 24 மணி நேரத்தில் 340,000க்கும் அதிகமானோருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களையும் சேர்த்து இந்தியாவில் மொத்த தொற்று எண்ணிக்கை 16.5 மில்லியனைத் தொட்டுள்ளது. மொத்த தொற்று எண்ணிக்கையைப் பொறுத்தவரை அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது.
இந்தியாவில் மூன்றே நாட்களில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. நிலைமையை மோசமாக்கும் விதமாக நாட்டின் பல பகுதிகளிலும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவுவதால் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் இன்று (ஏப்ரல் 24) காலை வரையிலான 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 2,624 மரணங்கள் பதிவாகியுள்ளன. அந்நாட்டில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 190,000ஐ நெருங்கிவிட்டது.
இந்நிலையில், இந்தியாவைப் புரட்டிப்போடும் இரண்டாவது கிருமித்தொற்று அலை உச்சத்தை எட்ட குறைந்தது மூன்று வாரங்களாவது ஆகும் என்று முன்னுரைக்கும் நிபுணர்கள், நாட்டில் உண்மையான மரண, தொற்று எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதைவிட அதிகமாக இருக்கும் என்று கூறுகின்றனர்.
இரண்டாவது தொற்று அலைக்கு மத்திய அரசாங்கம் தயாராக இருக்கவில்லை எனக் கூறி பலதரப்பினரும் அதைக் கடுமையாக விமர்சித்துள்ளன. மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நகர்களுக்கு ஆக்ஸிஜனை விநியோகிக்க சிறப்பு ரயில்களுக்கு மத்திய அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.