கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து; 18 நோயாளிகள் மரணம்
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் நேற்று (ஏப்ரல் 30) பின்னிரவு நேரத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி 18 பேர் மாண்டுவிட்டனர்.
குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டத்தில் உள்ளது பாரூச் நகரம். இங்கு பட்டேல் நல மருத்துவமனை என்ற பெயரில் தனியார் அறக்கட்டளை மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. 70க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று வந்தனர்.
நான்கு மாடிகளைக் கொண்ட மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் திடீரென தீப்பிடித்தது. இரவு நேரம் என்பதால் உடனடியாக யாரும் தீப்பற்றி எரிவதை கவனிக்கவில்லை.
சிறிது நேரத்தில் அலறல் சத்தம் கேட்டது. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்த மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் உள்ளூர் மக்களும் சேர்ந்துகொண்டு மீட்புப் பணியிலும் தீயை அணைப்பதிலும் உதவினர்.
அவசர சிகிச்சைப் பிரிவின் கதவுகளை தீ சூழ்ந்துகொண்டதால் சன்னல்களை உடைத்துச் சென்று உள்ளே மாட்டிக்கொண்டவர்கள் மீட்கப்பட்டனர்.
ஒரு மணி நேரத்தில் தீ முற்றாக அணைக்கப்பட்டது. அங்கிருந்த 50 நோயாளிகள் உடனடியாக வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இருப்பினும், 18 நோயாளிகள் உடல் கருகி மாண்டனர். அவர்களில் 12 பேர் தங்களது படுக்கையில் உறங்கிய நிலையிலேயே உயிரிழந்துவிட்டனர். மாண்ட அனைவரும் கொரோனா நோயாளிகள்.
இச்சம்பவம் குறித்து வேதனை தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, மாண்டோரின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தார்.