வெளிநாட்டு ஊழியர் தீர்வை தள்ளுபடி $250 ஆக கூடுகிறது
கட்டுமானம், கடல், பதனீடு ஆகிய துறைகளைச் சேர்ந்த ஏறத்தாழ 15,000 நிறுவனங்கள் இந்த மாதத்திற்கும் வரும் டிசம்பருக்கும் இடையில் அதிக வெளிநாட்டு ஊழியர் தீர்வை தள்ளுபடியைப் பெறும்.
கொவிட்-19 காரணமாக சிங்கப்பூர் தன் எல்லை கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கி இருக்கிறது. இதனால் அந்நிறுவனங்களுக்கு ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. செலவும் கூடி இருக்கிறது. இவற்றைக் கருத்தில்கொண்டு நிறுவனங்களுக்கு உதவும் வகையில் தீர்வை தள்ளுபடி அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
ஒவ்வோர் ஊழியருக்கும் உரிய மாதாந்திர தீர்வை தள்ளுபடி $90லிருந்து $250 ஆக அதிகரிக்கும் என்று மனிதவள அமைச்சு இன்று (மே 8) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. சிங்கப்பூரின் மேம்பாட்டில் இந்தத் துறைகள் அத்தியாவசியப் பணியை ஆற்றுகின்றன என்பதை அமைச்சு சுட்டியது.
இந்தத் தொழில்துறைகளை உருமாற்றி தானியக்கமயத்தை அதிகரிக்க அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.
இப்படிச் செய்வதன் மூலம் இந்தத் துறைகள் எதிர்காலத்தில் பாதிப்புகள் ஏற்படும்போது அதிக மீட்சித்தன்மையுடன் செயல்பட முடியும் என்று அமைச்சு குறிப்பிட்டு உள்ளது.
இருந்தாலும் இந்த முயற்சிகள் பலன் தர அதிக காலம் பிடிக்கும் என்பதையும் அமைச்சு சுட்டியது.
இந்த இடைப்பட்ட காலத்தில் செலவு கூடுவதால் இத்தகைய நிறுவனங்களுக்குச் சுமை அதிகரிக்கிறது. ஆகையால்தான் வெளிநாட்டு ஊழியர்களுக்கான தீர்வை தள்ளுபடி உயர்த்தப்படுகிறது என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
மே மாதத்திற்கான அதிக தள்ளுபடி ஜூன் மாதம் கொடுக்கப்படும்.
இந்தத் தள்ளுபடிகளைக் கவனத்தில் கொண்டு முதலாளிகள் இப்போதைய ஊழியர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம். அல்லது கொவிட்-19 தொற்று குறைந்த நாடுகளைச் சேர்ந்த ஊழியர்களை இங்கு கொண்டு வரலாம் என்று அமைச்சு கூறியது.
தள்ளுபடிகளை மேலும் நீட்டிக்க வேண்டி இருக்குமா என்பது பற்றி டிசம்பர் மாத வாக்கில் அரசாங்கம் முடிவு செய்யும்.