வேலை அனுமதி அட்டைதாரர்களுக்கு கதவு மூடப்படவில்லை: மனிதவள அமைச்சு
வேலை அனுமதி அட்டைதாரர்களுக்கும் சார்ந்திருப்போருக்கும் சிங்கப்பூர் தனது எல்லைகளை மூடவில்லை என்று மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
முக்கியமான துறைகளுக்கும் உள்கட்டமைப்பு பணிகளுக்கும் தேவைப்படக்கூடிய வேலை அனு மதி அட்டைதாரர்கள் சிங்கப்பூருக்கு வர அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சு கூறியது.
கொவிட்-19 தொற்று அதிகம் உள்ள நாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள் இங்கு வருவதை அமைச்சு குறைக்கிறது.
பல நாடுகளிலும் கொவிட்-19 தொற்று மறுபடியும் அதிகரிப்பது, புதிய உருமாறிய கிருமிகள் தலை எடுப்பது ஆகிய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு இந்த மாற்றங்களைச் செய்வதாக அமைச்சு தெரிவித்தது.
மே 11 முதல் வேலை அனுமதி அட்டைதாரர்கள் சிங்கப்பூருக்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று செய்தித் தளங்களில் தகவல்கள் இடம்பெற்று இருப்பதன் தொடர்பில் அமைச்சு விளக்கம் அளித்தது.
கொவிட்-19 அதிகம் பாதிப்புள்ள நாடுகளில் இருந்து புதிதாக வேலை அனுமதியின் பேரில் ஊழியர்களை வரவழைப்பதற்கான விண்ணப்பங்களை சிங்கப்பூர் ஏற்காது என்றும் இது உடனடியாக நடப்புக்கு வருவதாகவும் அமைச்சு நேற்று (மே 7) தெரிவித்து இருந்தது.
என்றாலும் முக்கியமான உத்தி பூர்வ திட்டங்கள், உள்கட்டமைப்புப் பணிகள் ஆகியவற்றுக்கான ஊழியர்களுக்கு விதிவிலக்கு இருக்கும்.
ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்டு இருக்கும் வேலை அனுமதிச்சீட்டுதாரர்கள் இங்கு வருவதற்கான காலநேரம் மாற்றி அமைக்கப்படும் என்றும் மனிதவள அமைச்சு நேற்று அறிவித்திருந்தது.