சமூக அளவில் ஏழு பேர் உட்பட சிங்கப்பூரில் இன்று (மே 8) நண்பகல் நிலவரப்படி புதிதாக 20 பேருக்கு கொரொனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமூகத்தில் தொற்று உறுதியான அந்த எழுவரில் இருவர், முன்னதாக கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள். அவர்கள் ஏற்கெனவே தனிமை உத்தரவின்கீழ் வைக்கப்பட்டுவிட்டனர். எஞ்சிய ஐவருக்கும் முன்னதாக கிருமி தொற்றியவர்களுக்கும் தொடர்பில்லை.
இதனிடையே, வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த 13 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று சுகாதார அமைச்சு சற்று முன்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. அந்த 13 பேரில் ஒன்பது பேர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்.
வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் புதிதாக எவருக்குத் தொற்று பதிவாகவில்லை.
சிங்கப்பூரில் இதுவரை கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 61,331ஆக உள்ளது.