சிங்கப்பூர் பள்ளியில் கொரோனா பரவிய முதல் சம்பவம் பதிவு
சிங்கப்பூரில் பள்ளியில் கொரோனா பரவிய முதல் சம்பவம் பதிவாகி இருக்கிறது.
நேற்று (மே 21) சமூக அளவில் பதிவான கொரோனா பாதிப்புகளில் ஆங்கிலோ-சீனப் பள்ளி (ஜூனியர்) மாணவரும் ஒருவர்.
அந்த 11 வயது சிறுவன், கடந்த புதன்கிழமை கொரோனா தொற்று உறுதிப்படுத்த இன்னொரு மாணவரின் வகுப்புத் தோழன் என்று கல்வி அமைச்சு தெரிவித்தது.
சக மாணவருக்குக் கிருமித்தொற்று உறுதியானதை அடுத்து, மறுநாள் வியாழக்கிழமை அந்த 11 வயது மாணவர் தனிமைப்படுத்தப்பட்டார். அதே நாளில் காய்ச்சலாலும் இருமலாலும் அவர் பாதிக்கப்பட்டார். இந்த அறிகுறிகளை அடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மறுநாள் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவு, அவரை கொரோனா தொற்றியிருப்பதை உறுதிப்படுத்தியது. அவருக்கான ‘சிராலஜி’ சோதனை முடிவு இன்னும் வெளியாகவில்லை.
இதையடுத்து, “ஏசிஎஸ் (ஜூனியர்) பள்ளியில் பதிவான கொரோனா பாதிப்புகள், நம் பள்ளிகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதை நம் அனைவருக்கும் நம் பங்காளிகளுக்கும், குறிப்பாக பெற்றோர்களுக்கு மீண்டும் தெளிவாக நினைவூட்டுவதாக அமைந்துள்ளன,” என்று கல்வி அமைச்சு இன்று ஓர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.