சமூகத்தில் கொவிட்-19 பரவல் அதிகரித்து வருவதன் எதிரொலியாக, நாளை மறுநாள் 19ஆம் தேதி புதன்கிழமையில் இருந்து இம்மாதம் 28ஆம் தேதி வரை அனைத்துப் பள்ளிகளிலும் வீட்டிலிருந்தபடி கற்கும் நடைமுறை இடம்பெறும்.
அனைத்து தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளுக்கும் தொடக்கக் கல்லூரிகளுக்கும் மில்லெனியா கல்வி நிலையத்திற்கும் சிறப்புக் கல்வி பள்ளிகளுக்கும் இது பொருந்தும்.
கடும் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளுடன் அரையாண்டு ஜிசிஇ 'ஓ' மற்றும் 'ஏ' நிலை தாய்மொழிப் பாடத் தேர்வுகள் திட்டமிட்டபடி இடம்பெறும் என்று கல்வி அமைச்சு நேற்று ஓர் அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளது.
வீட்டிலிருந்தபடி கற்கும் நடைமுறை இடம்பெறும் காலகட்டத்தின்போது கற்றல் நடவடிக்கைகள் இடையூறின்றித் தொடர ஏதுவாக, மாணவர்கள் இணையம் வழியாகவும் கைப்பிரதிகளைக் கொண்டும் படிக்கும் வகையில் பள்ளிகள் ஆதரவையும் அறிவுறுத்தல்களையும் வழங்க வேண்டும்.
மின்னிலக்கக் கருவிகள் அல்லது இணைய வசதி தேவைப்படும் மாணவர்களுக்கும் பள்ளிகள் உதவ வேண்டும்.
"கூடுதல் ஆதரவு தேவைப்படும் மாணவர்களுக்காகப் பள்ளிகள் திறந்திருக்கும். குறிப்பாக, அத்தியாவசிய சேவைகளில் பணியாற்றும் அல்லது மாற்றுப் பராமரிப்பு ஏற்பாடுகளைச் செய்ய முடியாத பெற்றோர்கள், உதவிக்காக தங்கள் பிள்ளைகள் படிக்கும் தொடக்கப் பள்ளிகளை அணுகலாம்," என்று அமைச்சு தெரிவித்து இருக்கிறது.
சாத்தியப்பட்டால் உயர்கல்வி நிலையங்கள் ஜூன் 13ஆம் தேதி வரை அதிகமான வகுப்புகளை இணையம் வழியாகக் கற்கும்படி மாற்ற வேண்டும்.
ஆய்வக, செய்முறை வகுப்புகள், இறுதியாண்டு ஒப்படைப்புகள் போன்ற நேரில் கற்க வேண்டிய அவசியமுள்ள வகுப்புகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும்.
சிங்கப்பூரில் நேற்று சமூகத்தில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதில் 18 பேர், ஏற்கெனவே பாதிக்கப்பட்டோருடன் இப்போதைக்கு எவ்விதத் தொடர்பும் இல்லாதவர்கள்.
பள்ளி விடுமுறையை முன்கூட்டியே கொண்டு வராமல் வீட்டில் இருந்தபடி கற்கும் நடைமுறையை அமல்படுத்துவது ஏன் எனக் கேட்டதற்கு, வீடுகளுக்கு வெளியே முடிந்த அளவு நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்வதே அதன் நோக்கம் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் விளக்கமளித்தார்.
அடுத்த இரு வாரங்களில் மாணவர்களை அர்த்தமுள்ள நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டும் என்று பெற்றோர்களும் கல்வியாளர்களும் கருத்துரைத்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் சான், வீட்டில் இருந்தபடி கற்கும் நடைமுறை அந்த இலக்கின் ஒரு பகுதியை அடையச் செய்யும் என்று குறிப்பிட்டார்.
கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் நேற்றைய மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு சொன்னார்.
இம்மாதம் 29ஆம் தேதியில் இருந்து ஜூன் 27ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை.
தங்கள் மாணவர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏழு தொடக்கப் பள்ளிகள் முன்கூட்டியே வீட்டில் இருந்து கற்கும் நடைமுறையைத் தொடங்கிவிட்டன. அந்தப் பாதிப்புகள் அனைத்தும் துணைப்பாட நிலையங்களுடன் தொடர்புடையவை. பள்ளிகளில் இதுவரையிலும் எந்த ஒரு மாணவரையும் கொரோனா தொற்றியதாகத் தெரியவில்லை.
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இலேசான அறிகுறிகளே காணப்படுகின்றன என்றும் அவர்களில் எவரது உடல்நிலையும் மோசமாகவில்லை என்றும் அமைச்சர் சான் தெளிவுபடுத்தினார்.
இருப்பினும், புதிய உருமாறிய கிருமிகள் அதிகம் பரவக்கூடியவை என்பதாலும் இளம் பிள்ளைகளைத் தாக்கவல்லதாகத் தெரிகிறது என்பதாலும் நிலைமை கவலையளிப்பதாக உள்ளது என்றும் அவர் சொன்னார்.
துணைப்பாட நிலையங்களும் செறிவூட்டல் வகுப்புகளும் ஜூன் 13ஆம் தேதி வரை அல்லது அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை தங்களது நடவடிக்கைகளை இணையம் வழியாக இடம்பெறும்படி மாற்றிக்கொள்ள வேண்டும்.
பாலர் பள்ளிகள், மாணவர் பராமரிப்பு நிலையங்கள் திறந்திருக்கும்
வரும் வாரங்களில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வீட்டிலேயே வைத்திருக்க ஊக்குவிக்கப்படுகின்றனர். அதே வேளையில், பாலர் பள்ளிகளும் மாணவர் பராமரிப்பு நிலையங்களும் திறந்திருக்கும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.
"பெற்றோர்கள் பலரும் அத்தியாவசியப் பணியாளர்களாக இருப்பதால் அவர்கள் வேலை செய்ய வேண்டியிருக்கும் என்பதை அறிந்துள்ளோம்.
"இந்தக் காலகட்டத்தில் அவர்களுக்கு உதவும் வகையில், பள்ளிகளின், குழந்தைப் பராமரிப்பு நிலையங்களின் சேவைகள் தேவைப்படும். அத்தகைய சேவைகள் தேவைப்படும் பெற்றோர்களுக்கும் குடும்பங்களுக்கும் உதவ எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்," என்று திரு சான் கூறியுள்ளார்.
பணியிடங்களில் பெரும்பாலும் வீட்டிலிருந்தபடி வேலை செய்வது புதிய இயல்புநிலையாக இருப்பதால், சாத்தியமுள்ள பட்சத்தில் இந்தக் காலகட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வீட்டிலேயே வைத்திருக்கும்படி கல்வி அமைச்சு ஊக்குவிக்கிறது.
அப்படி பாலர் பள்ளிகளில் பயிலும் தங்கள் பிள்ளைகளை வீட்டிலேயே வைத்திருக்க முடியும் பெற்றோர்களுக்காக, பாலர் பள்ளி மானியங்களைப் பெறத் தேவையான குறைந்தபட்ச வருகைப்பதிவைத் தளர்த்த பாலர் பருவ மேம்பாட்டு வாரியம் ஆயத்தமாகி வருவதாக அமைச்சு குறிப்பிட்டு இருக்கிறது.
அதுபோல, எல்லாப் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை வீட்டிலேயே வைத்திருக்க முடிவுசெய்தால், இந்தக் காலகட்டத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு பாலர் பள்ளிகள் செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்ற தேவையைத் தளர்த்தவும் பாலர் பருவ மேம்பாட்டு வாரியம் தயாராகிறது.
வீட்டிலிருந்து கற்கும் நடைமுறை சில பெற்றோர்களுக்கு மனக்கலக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதை அறிந்துள்ளதாகவும் திரு சான் சொன்னார்.