சுகாதார அமைச்சர்: கடும் கட்டுப்பாடுகளால் சிங்கப்பூரில் கிருமித்தொற்று அதிகரிக்கவில்லை
சிங்கப்பூர் எடுத்த கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஒரு வாரத்தில் புதிய கொவிட்-19 தொற்று பாதிப்புகள் அதிகரிக்கவில்லை என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்து இருக்கிறார்.
உணவு நிலையங்களில் அமர்ந்து உண்ணத் தடை, சமூக ஒன்றுகூடல்களுக்குக் கட்டுப்பாடு உட்பட இம்மாதம் 16ஆம் தேதி முதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டன. அதுமுதல், அன்றாட புதிய தொற்று பாதிப்பு 20 முதல் 30 என்ற அளவிலேயே இருந்து வருவதாக திரு ஓங் கூறினார்.
“முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காவிடில், பரிசோதனைகளை மேற்கொள்ளாவிடில், தொடர்புகளின் தடமறிதல் இடம்பெறாவிடில் ஏற்படும் பாதிப்பு அதிகரிப்பைப் போன்ற நிலையை இப்போது காண முடிவதில்லை. அத்தகைய சூழல்களில், அஞ்சத்தக்க வகையில் வழக்கமாக ஒவ்வொரு வாரமும் பாதிப்பு இரட்டிப்பாகலாம்,” என்றார் அமைச்சர்.
இங்கு கொரோனா பாதிப்பு நிலைப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
“தொற்று நிலவரம் எத்திசையில் செல்கிறது என்பதை அறிய இன்னும் சில நாள்களைக் கவனிக்க வேண்டியுள்ளது. ஆனாலும் நமது பங்கைத் தொடர்ந்து ஆற்றுவதன் மூலம், அதனை நாம் ஒடுக்கலாம்,” என்று திரு ஓங் சொன்னார்.
‘புளாஸம் சீட்ஸ்’ அறப்பணி அமைப்பு, ‘வேற்றுமையில் ஒற்றுமை’ எனும் புதிய இயக்கத்தை மெய்நிகர் முறையில் இன்று (மே 22) அறிமுகம் செய்தது. அதில் பங்கேற்றபோது அமைச்சர் ஓங் இவ்வாறு பேசினார்.