கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்த பத்தில் ஒருவருக்கு அறிகுறிகள் தொடர்கின்றன: ஆய்வு
கொவிட்-19 தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த பத்தில் ஒருவருக்கு, தொற்று ஏற்பட்டு ஆறு மாதங்கள் கழித்தும் அறிகுறிகள் தென்படுவதாக தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த நிலை “long Covid” என்று அழைக்கப்படுகிறது. தொற்றிலிருந்து குணமடைந்த நீண்டநாள் கழித்தும் அத்தகையோரிடம் இருமல், மூச்சு விடுவதற்கு சிரமம் உள்ளிட்ட அறிகுறிகள் பொதுவாக தென்படுகின்றன.
சோர்வு, மயக்கம், தூக்கமின்மை உள்ளிட்டவை இதர அறிகுறிகளில் அடங்கும். ஆனால், அவை அடிக்கடி தென்படுவதில்லை. தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையம் நடத்திய இந்த ஆய்வில் மூன்று பொது மருத்துவமனைகள் பங்கேற்றன.
கொவிட்-19 தொற்றிய முதல் வாரத்தில் ஆய்வில் சேர்ந்த நோயாளிகளின் உடல்நிலை ஆறு மாதங்களுக்கு கண்காணிக்கப்பட்டது.
இந்த ஆய்வில் 288 நோயாளிகள் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 183 பேர் வெளிநோயாளி சிகிச்சைக்காக வந்து சென்றனர்.
சீன இனத்தவர் அல்லாது 65 வயதுக்கு மேற்பட்ட மற்ற இனத்தவர்களுக்கு கொவிட்-19 தொற்றால் கடுமையான நோய் ஏற்படும்போது, அவர்களுக்கு அறிகுறிகள் நீண்டநாள் தொடரும் சாத்தியம் அதிகம் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், சீன இனத்தவர் அல்லாது மற்ற இனத்தவர்களுக்கு மட்டும் இந்தப் பாதிப்பு தொடர்வதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.