மூன்றாவது தடுப்பூசியின் பக்கவிளைவுகளும் ஒரே மாதிரியானவை: இஸ்ரேல்
இஸ்ரேலில் ஃபைசர் கொவிட்-19 தடுப்பூசியை மூன்றாவது முறையாக போட்டுக்கொண்டவர்களுக்கு, இரண்டாவது முறை தடுப்பூசி போட்டுக்கொண்டபோது இருந்ததைப் போன்ற அல்லது அதைவிட குறைவான, பக்கவிளைவுகளே இருந்ததாக முதல்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுவரை 240,000த்திற்கும் மேற்பட்டோருக்கு மூன்றாவது தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கேலிட் எனும் சுகாதார சேவை வழங்கும் நிறுவனம் கூறியது.
அவர்களில் சுமார் 4,500 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
88 விழுக்காட்டினர், இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொண்டபோது இருந்ததைப் போன்ற அல்லது அதைவிட குறைவான பக்கவிளைவுகள் தற்போதும் உள்ளதாக தெரிவித்தனர்.
0.4 விழுக்காட்டினருக்கு சுவாசிப்பதில் சிரமும் 1 விழுக்காட்டினர் பக்கவிளைவுகள் காரணமாக மருத்துவ சிகிச்சையை நாடியதாகவும் குறிப்பிட்டனர்.
டெல்டா வகை கொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கூடுதல் தடுப்பூசி போடும் திட்டத்தை இஸ்ரேல் சுமார் 10 நாட்களுக்கு முன்பு தொடங்கியது.
அமெரிக்க உணவு, மருந்து நிர்வாக அமைப்பு மூன்றாவது தடுப்பூசிக்கு அனுமதி வழங்குவதற்கு முன்பே இஸ்ரேல் அந்த பணியைத் தொடங்கிவிட்டது.
அந்த வகையில் மூன்றாவது தடுப்பூசியின் பக்கவிளைவுகள், அவற்றின் செயல்திறனுக்கான சோதனைக் களமாக தற்போது இஸ்ரேல் விளங்குகிறது.