‘ஃபைசர், மொடர்னா தடுப்பூசிகளின் ஆற்றல் குறைந்திருக்கலாம்’
ஃபைசர், மொடர்னா ஆகிய நிறுவனங்களின் கொவிட்-19 தடுப்பூசிகளின் ஆற்றல் கடந்த சில மாதங்களில் குறைந்திருக்கக்கூடும் என்று அமெரிக்காவின் ‘சிடிசி’ எனப்படும் நோய்க் கட்டுப்பாடு, தடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த வரும் மாதங்களில் மூன்றாவது தடுப்பூசி தேவைப்படும் என்று நிலையம் கூறியது. தான் வெளியிட்ட மூன்று ஆய்வுகளின் முடிவுகளில் அதற்கான தேவை ஆதாரத்துடன் தெரிவதாக அது சொன்னது.
அதேபோல், பிரிட்டிஷ் அரசாங்கம் நடத்திய ஒரு சுகாதார ஆய்விலும் ஃபைசர், மொடர்னா தடுப்பூசிகளின் டெல்டா வகை கொவிட்-19 கிருமித்தொற்றைத் தடுப்பதற்கான ஆற்றல் குறைந்துள்ளது தெரியவந்தது.
ஒரு முறை போடப்படும் ஆஸ்ட்ரஸெனெக்கா தடுப்பூசிக்கும் இதே நிலை.
இதற்கிடையே, அமெரிக்காவில் ஃபைசர், மொடர்னா தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டோர், அடுத்த மாதம் 20ஆம் தேதியிலிருந்து மூன்றாம் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவ்விரு நிறுவனங்களின் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டு குறைந்தது எட்டு மாதங்கள் ஆன பிறகு மூன்றாவது தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்.
“புதிய வகை கொவிட்-19 கிருமியிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள மூன்றாவது தடுப்பூசி போட்டுக்கொள்வதுதான் ஆகச் சிறந்த வழி,” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
மேலும், அமெரிக்காவில் தாதிமை இல்லங்களில் வேலை செய்வோருக்கு கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்படும் என்று அவர் கூறினார்.