தங்குவிடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு செப்டம்பர் 13 முதல் கட்டாய சுயபரிசோதனை முறை
தங்குவிடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் வரும் திங்கட்கிழமை (செப்டம்பர் 13) முதல் ஆன்டிஜன் விரைவுப் பரிசோதனை (ஏஆர்டி) கருவிகளைக் கொண்டு தங்களை அடிக்கடி பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
ஏற்கெனவே நடப்பில் உள்ள அட்டவணைப்படுத்தப்பட்ட பரிசோதனை முறைக்கு மேலாக இந்த சுயபரிசோதனை முறை கட்டாயமாக்கப்படுகிறது. அட்டவணைப்படுத்தப்பட்ட பரிசோதனையின்கீழ் ஊழியர்களுக்கு வாரத்திற்கு அல்லது இரு வாரங்களுக்கு ஒருமுறை கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
தங்குவிடுதிகளில் கிருமித்தொற்றுப் பரவலைத் தடுக்க பரிசோதனை மூலம் தொற்றுக்கு ஆளாவோரைக் கண்டறிவது தொடர்ந்து இன்றியமையாதது என்று மனிதவள அமைச்சு கூறியது.
புதிய நடைமுறையின்கீழ், ஏழு நாள்களுக்கு ஒருமுறை கொவிட்-19 பிசிஆர் தொற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் ஊழியர்கள், அதிலிருந்து மூன்று நாள்கள் கழித்து ஏஆர்டி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட, தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்களுக்கும் இது பொருந்தும்.