சிங்கப்பூரர்களின் நியாயமான கவலைகள் பற்றி பேசுவதற்கும் வெளிநாட்டவர் சார்ந்த கோபங்களைக் குறைக்கவும் வேலை அனுமதியில் உள்ளவர்கள் பற்றிய சங்கடமான பிரச்சினை பற்றி தாம் பேச முடிவெடுத்ததாகப் பிரதமர் தெரிவித்தார்.
அப்போதுதான் சிங்கப்பூர் தொடர்ந்து திறந்த சமூகமாகத் திகழ்ந்து தொடர்ந்து முன்னேற முடியும் என்றார் அவர்.
‘‘உண்மை என்னவெனில் நாம் சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டவருடன் மட்டும் போட்டியிடவில்லை, உலகில் உள்ள அனைவருடனும் போட்டி போடுகின்றோம். ‘எங்கிருந்தும் வேலை செய்யலாம்’ என்பது ‘வீட்டிலிருந்து வேலை செய்யும் சூழலுக்கு’ அடுத்த கட்டம் என்பதை கொவிட்-19 பல நிறுவனங்களுக்கு உணர்த்தி உள்ளது.’’
இங்குள்ள வெளிநாட்டவர்கள் நமது ஊழியரணியை வலுப்படுத்துகின்றனர். அவர்கள் சிங்கப்பூரர்களின் சக ஊழியர்கள், அக்கம்பக்கத்தினர், நண்பர்கள் என்றும் திரு லீ வலியுறுத்தினார்.
கொவிட்-19 சூழல் பல வெளிநாட்டு ஊழியர்களை தனிப்பட்ட முறையில் பாதித்துள்ளது என்றும் வெளிநாட்டில் உள்ள தங்கள் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து வாழும் அவர்கள், தங்கள் நாட்டுக்குத் திரும்பமுடியாத நிலை ஏற்பட்டது என்பதையும் பிரதமர் நினைவுப்படுத்தினார்.
வெளிநாட்டினரில் பலர் முன்களத்தில் சிங்கப்பூரர்களுடன் தோளுக்குத் தோளாக நின்று உழைத்தனர் என்பதையும் அவர்களும் சிங்கப்பூருக்குப் பங்களித்துள்ளனர் என்றும் அவர்களை நாம் புறக்கணித்து சிங்கப்பூர் வெளிநாட்டவர்க்கு விரோதமான நாடு என்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்றும் திரு லீ கூறினார். மாறாக, சிங்கப்பூர் திறந்த பொருளியலாக தொடர்வதை உலக்குக்குக் காட்ட வேண்டும் என்றார் அவர்.