டிரேஸ்டுகெதர் தகவல் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு
வீட்டிலிருந்தே குணமடைந்த கொவிட்-19 நோயாளியின் டிரேஸ்டுகெதர் செயலி அவர் ‘இன்னமும் குணமடையவில்லை’ என்று காட்டும் பிரச்சினைக்கு அடுத்த சில நாள்களில் தீர்வு காணப்பட்டுவிடும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.
அச்செயலியில் காணப்படும் அத்தகைய தகவல் ஒருவர் குணமடைந்தவராக விடுவிக்கப்படும் தேதியுடன் ஒன்றிணைக்கப்படும்.
அதாவது அவர் வீட்டிலேயே முற்றிலும் குணமடைந்ததும், குணமடையவில்லை என்று காட்டும் தகவல் அந்தச் செயலியில் தானாகவே அழிந்துவிடும்.
இதனையடுத்து, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பத்து நாள்கள் கழித்து வழக்கமான நடவடிக்கைகளைத் தொடங்கலாம். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் இதற்கு 14 நாள்கள் காத்திருக்க வேண்டும்.
ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி எம்.பி. ஜெசிக்கா டானுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வீட்டிலிருந்து குணமடையும் நடைமுறையிலிருந்து பத்து நாள்கள் கழித்து தானாகவே விடுவிக்கப்படுகிறார்கள் என்று விளக்கினார்.
இந்தக் கொள்கையுடன் தகவல் தொழில்நுட்ப ஏற்பாட்டு முறை ஒத்துப்போக வேண்டும் என்றும் இந்தப் பிரச்சினைக்கு இந்த வாரத்திலேயே தீர்வு காணப்பட்டுவிடும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.