கிருமித்தொற்று அபாயம் குறித்து முன்னரே எச்சரிக்கும் செயலி
கொவிட்-19 கொள்ளைநோய் தொடங்கியது முதல், உலகெங்கிலும் தொடர்புகளின் தடமறியும் செயலிகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்ட ஒருவருடன் தொடர்பில் இருந்திருப்பதை இச்செயலிகள் அவற்றின் பயனாளர்களுக்குத் தெரிவிப்பதே வழக்கம்.
இருப்பினும், தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதை முன்னதாகவே எச்சரிக்கும் அமைப்புமுறையை இச்செயலிகள் கொண்டிருந்தால் அது மேலும் பயனுள்ளதாக இருக்கும். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, கிருமி தொற்றும் ஆபத்தில் இருந்து மக்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ளலாம் என்று கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தின் கணிதப் பேராசிரியர் லோ போ ஷென் கூறினார்.
அவர் உருவாக்கிய ‘நொவிட்’ செயலியின் நோக்கமும் அதுவே. பயனாளருடன் அடிக்கடி தொடர்பில் இருப்போரைக் கொண்ட கட்டமைப்பை, செயலியின் எச்சரிக்கை அமைப்புமுறை முன்னரே கண்காணித்து வரும்.
‘டிரேஸ்டுகெதர்’ செயலி போன்றே ‘புளூடூத்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒருவரது தொடர்புகளை ‘நொவிட்’ வரிசைப்படுத்தும். எடுத்துக்காட்டாக, அன்றாடம் நேரில் பார்க்கும் குடும்ப உறுப்பினரை முதல் தொடர்புநிலை என்றும் இதுவரை பார்த்திராத அந்தக் குடும்ப உறுப்பினருடைய வேலை நண்பரை இரண்டாவது தொடர்புநிலை என்றும் இச்செயலி வகைப்படுத்தும்.
இப்படி 12 தொடர்புநிலைகள்வரை உள்ளன. கொவிட்-19 உறுதிசெய்யப்பட்ட ஒருவர், அந்த 12 தொடர்புநிலைகளுக்குள் இருந்தால், பயனாளருக்குத் தகவல் தெரிவிப்பதுடன் அவரது தொடர்புநிலை என்ன என்பதையும் செயலி குறிப்பிடும்.
அடையாளத்தைக் காக்கும் நோக்கில் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்ட மனிதர் குறித்த தகவல் எதுவும் தெரிவிக்கப்படாது.
‘நொவிட்’ கருத்தாக்கத்தை விளக்கிய பேராசிரியர் லோ, கடந்த மாதம் பிரதமர் லீ சியன் லூங்கின் ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் பதிவிட்டிருந்தார்.
இதன் தொடர்பில், சிங்கப்பூர் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படத் தமக்கு ஆர்வம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து ஆராய, தகவலை சிங்கப்பூரின் அரசாங்க தொழில்நுட்ப அமைப்பிடம் (கவ்டெக்) தாம் தெரிவித்திருப்பதாக பிரதமர் லீ பதிலும் அளித்திருந்தார். பின்னர், 'கவ்டெக்' தம்முடன் தொடர்புகொண்டதாகவும் தமது ஆராய்ச்சி குறித்து கூடுதல் தகவல்களைப் பகிர்ந்துகொண்டதாகவும் பேராசிரியர் லோ கூறினார்.
கொவிட்-19 கிருமியைவிட கொடிய கொள்ளைநோய்கள் எதிர்காலத்தில் வரக்கூடும். அப்போது, தொடர்புகளின் தடமறியும் இந்த மாறுபட்ட எச்சரிக்கை முறை பெரிதும் கைகொடுக்கலாம் என்கிறார் திரு லோ.