அனைத்துலக எல்லைகளைத் திறந்துவிட்டது ஆஸ்திரேலியா
மெல்பர்ன்: கொவிட்-19 பரவலுக்கு இடையே, ஆஸ்திரேலியா முதன்முறையாக உலக நாடுகளுக்குத் தனது கதவுகளை இன்றுமுதல் திறந்துவிட்டுள்ளது.
இதனால், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் தனிமைப்படுத்தலின்றிப் பயணம் செய்யவும் பிரிந்திருந்த குடும்பங்கள் மீண்டும் ஒன்றுசேரவும் வழி பிறந்துள்ளது.
பல மாதங்களாகப் பிரிந்திருந்த குடும்பத்தினர் நேரில் கண்டதும் ஆரத்தழுவி, தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்தியதை சிட்னி விமான நிலையத்தில் காண முடிந்தது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிசில் இருந்து கிளம்பிய குவான்டஸ் விமானம், இன்று காலை 6 மணிக்கு சிட்னியைச் சென்றடைந்தது.
முன்னதாக, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலமாகவும் அனைத்துலகப் பயணிகள் சிட்னியில் தரையிறங்கினர்.
சிங்கப்பூர் குடிமக்கள் இம்மாதம் 21ஆம் தேதியில் இருந்து தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையின்றி ஆஸ்திரேலியா சென்று வரலாம்.
இதற்கிடையே, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சுற்றுப்பயணிகளைத் தாய்லாந்தும் இந்தோனீசியாவும் இன்றுமுதல் வரவேற்கின்றன.
இந்தத் தளர்வுகள், ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்துலக விமானப் பயணத்திற்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளன.