கொவிட்-19 தொற்று மையமாக மீண்டும் உருவெடுக்கும் ஐரோப்பா
ஐரோப்பா கண்டம் மீண்டும் கொவிட்-19 தொற்று மையமாக உருவெடுத்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் கொரோனா தொற்று காரணமாக அங்கு மேலும் 500,000 பேர் உயிரிழக்கக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பியத் தலைவர் ஹன்ஸ் குளூக செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.
அக்கண்டத்திலுள்ள பல நாடுகளிலும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. போதுமான அளவில் தடுப்பூசி போடாததே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
அண்மைய மாதங்களாக பல ஐரோப்பிய நாடுகளிலும் தடுப்பூசி போடும் விகிதம் மெதுவடைந்து வருகிறது.
ஸ்பெயினில் 80 விழுக்காட்டினரும் பிரான்சில் 68 விழுக்காட்டினரும் ஜெர்மனியில் 66 விழுக்காட்டினரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
இவ்விகிதம் சில மத்திய, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இன்னும் குறைவாக இருக்கிறது. 2021 அக்டோபர் 31 நிலவரப்படி, ரஷ்யாவில் 32 விழுக்காட்டினர் மட்டுமே முழுமையாகத் தடுப்பூசி போட்டிருந்தனர்.
பொதுச் சுகாதாரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளதும் கிருமித்தொற்று மீண்டும் அதிகரிக்க ஒரு காரணம் என்று திரு குளூக குறிப்பிட்டார்.
ஜெர்மனியில் இன்று வெள்ளிக்கிழமை புதிதாக 37,000க்கும் மேற்பட்டோர்க்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் மட்டும் ரஷ்யாவில் ஏறக்குறைய 8,100 பேரும் உக்ரேனில் 3,800 பேரும் கொரோனாவால் இறந்துவிட்டனர். உக்ரேனில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,377 பேர்க்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.