கோவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் மலேசியா செல்ல அனுமதி
கோத்தா பாரு: இந்தியாவின் கோவேக்சின் தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட பயணிகள் மலேசியாவுக்கு வரலாம் என்று மலேசிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கொவிட்-19 தொற்றுக்கு எதிரான கோவோக்சின் தடுப்பூசியை அவசரகாலத்துக்குப் பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் அண்மையில் ஒப்புதல் வழங்கியது.
அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகள், கோவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கு அனுமதி அளிப்பதாகக் கூறி உள்ளன.
இந்நிலையில், கிளந்தானிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு நேற்று வருகையளித்த திரு கைரி, கோவேக்சினுக்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் வழங்கியதற்காக இந்தியாவுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியத் தயாரிப்புத் தடுப்பூசியை மலேசியா பயன்படுத்தாவிட்டாலும் அந்தத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை வரவேற்கும்,” என்றார்.
மலேசியாவிடம் போதுமான அளவுக்கு தடுப்பூசி கைவசம் உள்ளதால் கோவேக்சின் போன்ற வேறு தடுப்பூசிகளை வாங்க வேண்டிய அவசியம் எழவில்லை என்றும் அவர் கூறினார்.
கோவேக்சின் தடுப்பூசி 78 விழுக்காடு தடுப்பாற்றல் கொண்டது என பாரத் பயோடெக் நிறுவனம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.