தடுப்பூசி போடாதோர்க்கு முடக்கநிலையை அறிவிக்கவிருக்கும் நாடு
வியன்னா: முழுமையாக கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர்க்கு ஆஸ்திரியா இன்னும் சில நாள்களுக்குள் முடக்கநிலையை அறிவிக்க இருப்பதாக ‘பிபிசி’ செய்தி தெரிவிக்கிறது.
ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில், இதற்குமுன் இல்லாதவாறு கடந்த 24 மணி நேரத்தில் 11,975 பேர்க்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அச்சுறுத்தலைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆஸ்திரிய கொரோனா கிருமி ஆணையம் எச்சரித்துள்ளது.
இதனையடுத்து, தடுப்பூசி போடாதோர்க்குத் தேசிய அளவில் முடக்கநிலையை நடைமுறைப்படுத்துவதைத் தவிர்க்க முடியாது என்று அந்நாட்டின் பிரதமர் அலெக்சாண்டர் ஷாலன்பெர்க் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்குவோரால் நாட்டு மக்களில் மூன்றில் இரு பகுதியினர் பாதிக்கப்படக்கூடாது என்றார் அவர்.
ஜெர்மனியையும் செக் குடியரசையும் ஒட்டியுள்ள அப்பர் ஆஸ்திரியாவில் 1.5 மில்லியன் பேர் வசிக்கின்றனர். ஆஸ்திரியாவிலேயே அங்குதான் கொவிட்-19 பரவல் விகிதம் அதிகம். அதேவேளையில், அங்குதான் தடுப்பூசி போடுவதும் குறைவாக உள்ளது.
ஆஸ்திரியாவில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர், உணவகங்கள், திரையரங்குகள், முடிதிருத்தகங்கள் போன்ற இடங்களுக்குச் செல்ல ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தடுப்பூசி போடாதோர்க்கு மட்டும் முடக்கநிலையை நடைமுறைப்படுத்துவது அவ்வளவு எளிதானதாக இராது என்று விமர்சகர்கள் கருத்துரைத்துள்ளனர்.