‘ஓமிக்ரான்’ எதிரொலி: விழிப்புநிலையில் திருச்சி, மதுரை விமான நிலையங்கள்
திருச்சி/மதுரை: ‘ஓமிக்ரான்’ வகை கொரோனா கிருமி அச்சம் காரணமாக, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு திருச்சி, மதுரை விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசாங்கம் வெளியிட்டுள்ள அனைத்துலகப் பயண வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்பில், கண்காணிப்பை உறுதிசெய்ய திருச்சி விமான நிலைய அதிகாரிகள், விமானத் துறை அதிகாரிகளுடனுடம் மாவட்ட நிர்வாகத்தினருடனும் தனித்தனியாக சந்திப்பு நடத்தினர்.
தொற்று அபாயமுள்ள பகுதிகளில் இருந்து வரும் பயணிகளுக்காக விமான நிலையத்தில் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர், துபாய், சார்ஜா, கொழும்பு, கோலாலம்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் பயணிகளை திருச்சி விமான நிலையம் கையாளுகிறது.
ஓமிக்ரான் கிருமி கண்டறியப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வரும் அனைத்துப் பயணிகளும் இரு ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவர் என்றும் அவர்களுக்கு ஏழு நாள் இல்லத் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் மதுரை மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத் துறையும் கூறியுள்ளன.
ஓமிக்ரான் கிருமி கண்டறியப்பட்டுள்ள நாடுகளில் இருந்து மதுரைக்கு நேரடி விமானச் சேவை எதுவும் இல்லை என்றாலும், துபாயில் இருந்து வரும் விமானங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“திருச்சி விமான நிலையத்தைப் பொறுத்தவரை, ‘தொற்று அபாயம் அதிகம்’ உள்ள பிரிவில் சிங்கப்பூர் இடம்பெற்றுள்ளது. எனவே, சிங்கப்பூரில் இருந்து வரும் அனைத்துப் பயணிகளுக்கும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனையும் இல்லத் தனிமை உத்தரவும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
“பயணிகளிடம் இருந்து பரிசோதனை மாதிரி பெறப்பட்டவுடன், முடிவு வெளிவரும்வரை நான்கைந்து மணிநேரம் பயணிகள் விமான நிலையத்திலேயே காத்திருக்க வேண்டும். அவர்களுக்காக தனியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது,” என்று விமான நிலைய இயக்குநர் எஸ்.தர்மராஜ், டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழிடம் கூறினார்.