சுவாசக் குழாயில் வேகமாகப் பரவும் ஓமிக்ரான்
ஓமிக்ரானும் மற்ற வகைக் கிருமிகளும் பல்கிப் பெருகும் விதத்தில் உள்ள வேறுபாடுகளை ஆராய்ந்து ஓமிக்ரான் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளைப் பல்வேறு ஆய்வுகள் கணித்து வருகின்றன.
ஓமிக்ரான் வகை கொரோனா கிருமி, ஒருவரது சுவாசக் குழாயில் வேகமாகவும் நுரையீரல்களில் மெதுவாகவும் பல்கிப் பெருகுவதாக ஹாங்காங் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வு கூறியுள்ளது.
டெல்டா வகைக் கிருமியுடன் ஒப்பிடும்போது, ஓமிக்ரான் சுவாசக்குழாய் திசுக்களில் 70 மடங்கு வேகமாகப் பரவுகிறது என்றும் இது ஓமிக்ரான் வேகமாகப் பரவுவதற்கு உதவலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
ஆனால் நுரையீரல் திசுக்களில் ஓமிக்ரான், முதலில் தோன்றிய கொரோனா கிருமியைவிட 10 மடங்கு மெதுவாகப் பரவுகிறது.
இது கடும் நோயைத் தவிர்க்க உதவக்கூடும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
இருப்பினும் கடும் நோய் ஏற்படுகிறதா இல்லையா என்பது ஒருவரிடம் உள்ள தடுப்பாற்றலைப் பொறுத்திருக்கும் என்று ஹாங்காங் ஆய்வாளர்கள் கூறினர்.
கிருமி கடுமையானதாக இல்லாமல் போனாலும், அது பலரைத் தொற்றினால் கடும் நோயும் மரணங்களும் உயரக்கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்தனர்.
அதனால் ஓமிக்ரான் அச்சுறுத்தல் அதிமாகவே உள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.
இவ்வேளையில் ஓமிக்ரான் உடலில் உள்ள அணுக்களை இறுக்கமாகப் பற்றிக் கொள்வதாக வேறோர் ஆய்வு கூறுகிறது.
அமெரிக்காவின் ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வாளர்கள் ஓமிக்ரான் உடலில் உள்ள அணுக்களை ஆராய்ந்தனர்.
முதலில் தோன்றிய கொரோனா கிருமி, அணுக்களுடன் கைகுலுக்குவது போன்று பற்றிக்கொண்டது.
ஆனால் ஓமிக்ரான் தொற்றோ கைகோத்து விரல்கள் பின்னியிருக்கும் தம்பதி போல அணுக்களைப் பற்றிக் கொள்கிறது என்று அவர்கள் கூறினர்.
இதனால் அணுக்களில் தொற்று பரவுவது எளிதாகிறது.
மற்றோர் ஆய்வு, ஓமிக்ரான் தொற்றிய பத்தில் நால்வர் தெரியாமல் கிருமியைப் பரப்பக்கூடும் என்று கூறியுள்ளது.
உலக அளவில் ஓமிக்ரான் தொற்றியவர்களில் 40.5 விழுக்காட்டினருக்கு நோய் அறிகுறிகள் ஏதும் ஏற்படவில்லை என்று சீனாவில் உள்ள பெக்கிங் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர்களின் வழி கிருமி தொற்றியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.