ஓமிக்ரான் உருமாறிய கொவிட்-19 கிருமி முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தி, சுகாதார கட்டமைப்பைப் பாதுகாக்க உலக நாடுகள் உடனடியாகச் செயல்பட வேண்டும் என்று அது வலியுறுத்தியது.
ஓமிக்ரான் இதுவரை 77 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசுஸ் நேற்று முன்தினம் கூறினார்.
"பெரும்பாலான நாடுகளில் ஓமிக்ரான் தொற்று இன்னமும் கண்டறியப்படாமல் இருக்கலாம். முன்பு பரவி வந்த திரிபைவிட ஓமிக்ரான் வேகமாகப் பரவுகிறது," என்றார் டாக்டர் டெட்ரோஸ்.
சில ஐரோப்பிய நாடுகள் ஐந்தாவது கிருமித்தொற்று அலையை எதிர்கொண்டு வருகிறது என்றார் உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர் அப்டி மஹ்முட்.
ஜனவரி நடுப்பகுதியில் ஐரோப்பாவில் ஓமிக்ரான் அதிகம் பரவியிருக்கும் என்று ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் நேற்று கூறினார். ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று நாட்களிலும் பாதிப்பு இரட்டிப்பாவதாக சொன்ன அவர், ஓமிக்ரானை எதிர்த்துப் போராட அதிக தடுப்பூசியும் பூஸ்டர் ஊசியும் வழங்கப்படுவது முக்கியம் என்றார்.
ஓமிக்ரான் திரிபு இலேசான பாதிப்பையே ஏற்படுத்தும் என்ற முடிவுக்கு வரக்கூடாது என்று எச்சரித்துள்ளார் உலக சுகாதார நிறுவன நிபுணர் புருஸ் ஐய்ல்வார்ட்.
ஓமிக்ரான் கடுமை குறைவாக இருந்தாலும்கூட, அளவுக்கதிகமா னோர் பாதிக்கப்படும்போது மருத்துவ மனைகள் மீண்டும் திண்டாடக்கூடும் என்றார் டாக்டர் டெட்ரோஸ்.