சிங்கப்பூரில் 24 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி
சிங்கப்பூரில் வியாழக்கிழமை (டிசம்பர் 16) நிலவரப்படி 24 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 21 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்.
மூவருக்கு உள்ளூரில் தொற்று ஏற்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இத்துடன், மேலும் ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று இருப்பதாக முதற்கட்ட கிருமிப்பரிசோதனைகள் காட்டுகின்றன.
அவர் சாங்கி விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தில் பொருள்களை ஏற்றி இறக்கி வைக்கும் உதவியாளர் ஆவார்.
அந்த 42 வயது நபருக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அவர் விமானப் பயணிகளுடன் எந்த நேரடி தொடர்பும் கொண்டிருக்கவில்லை என்று அமைச்சு கூறியது.
ஓமிக்ரான் எளிதில் தொற்றுவதாலும் பல நாடுகளில் அது பரவியுள்ளதாலும் நம் எல்லைகளிலும் சமூகத்திலும் இன்னும் அதிகமான ஓமிக்ரான் தொற்றுச் சம்பவங்கள் நிகழும் என்று எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.
இதற்கிடையே, சிங்கப்பூரில் வியாழக்கிழமை நிலவரப்படி., புதிதாக 355 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒருவர் மாண்டார்.
கடந்த செப்டம்பர் 20ஆம் தேதியிலிருந்து தினமும் கொவிட்-19 தொற்று மரணங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், நேற்றுதான் மரண எண்ணிக்கை ஆகக் குறைவாக இருந்தது.