சிங்கப்பூரில் கூடுதலானோரிடம் ஓமிக்ரான் கண்டறியப்பட்டது
சிங்கப்பூரில் கூடுதலானோரிடம் ஓமிக்ரான் கிருமி கண்டறியப்பட்டு உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உலகின் பல நாடுகளில் ஓமிக்ரான் திரிபு பரவிவரும் வேளையில், அமைச்சு புதன்கிழமை (டிசம்பர் 22) இதனைத் தெரிவித்தது.
வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்களில் 65 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியது. பயணிகளுக்கான மேம்படுத்தப்பட்ட பரிசோதனை முறை மூலம் தொற்று கண்டறியப்பட்டது.
வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருபவர்களிடம் கொவிட்-19 தொற்று அதிகரித்து வரும் நிலையில், சிங்கப்பூர் அதன் எல்லை நடைமுறைகளைக் கடுமையாக்குகிறது.
“கிருமி தொற்றியவர்களின் தொடர்புகளின் தடங்களைக் கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், சமூக அளவில் கிருமிப் பரவலை இப்போதைக்கு எங்களால் கட்டுப்படுத்த முடிகிறது. ஆனால், சமூகத்தில் ஓமிக்ரான் பரவுவது எப்போது என்பதே கேள்வி,” என்று அமைச்சு கூறியது.
திங்கட்கிழமை நிலவரப்படி, சமூகத்தில் ஆறு பேரிடம் ஓமிக்ரான் கண்டறியப்பட்டது.