ஓங் விளக்கம்: நிலவரம் தெரியாததால்தான் சிங்கப்பூருக்குப் பயணிக்க வேண்டாம் என்று அமெரிக்கா எச்சரித்தது
சிங்கப்பூர் மேற்கொண்டு வரும் கொவிட்-19 கண்காணிப்புச் சோதனைகளின் எண்ணிக்கை தெரியாததால்தான், இங்கு பயணம் செய்வதைத் தவிர்க்கும்படி அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு தடுப்பு நிலையம் கேட்டுக்கொண்டதாக சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் கூறியுள்ளார்.
சிங்கப்பூருக்குப் பயணங்களைத் தவிர்க்கும்படி, அந்நிலையம் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 4) அன்று பயண ஆலோசனையை விடுத்தது.
அத்துடன் அது, சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமிச்சூழலின் நிலையைத், 'தெரியவில்லை' என்று வகைப்படுத்தியது.
போதிய தரவுகள் கிடைக்காததால் அந்தப் பயண ஆலோசனையை விடுத்ததாகவும் அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு தடுப்பு நிலையம் கூறியிருந்தது.
கொவிட்-19 நோய்ப்பரவலுக்கு எதிரான அமைச்சுநிலைப் பணிக்குழு புதன்கிழமை (ஜனவரி 5) அன்று நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் திரு ஓங் அந்த விவகாரம் பற்றி பேசினார்.
தேவையான தரவுகளை அளிக்க அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு தடுப்பு நிலையத்தையும் சிங்கப்பூரில் உள்ள அமெரிக்க தூதரகத்தையும் சுகாதார அமைச்சு தொடர்பு கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.
சிங்கப்பூர் சமூகத்தில் கிருமித் தொற்று குறைவு என்பதையும் கிருமி தொற்றை உறுதிசெய்யும் பரிசோதனைகளின் விகிதம் இங்கு குறைவு என்பதையும் அந்தத் தரவுகள் காட்டும் என்றார் திரு ஓங்.
"சிங்கப்பூரில் உள்ள தற்போதைய நிலை தெரியவில்லை என்பதால், முழுமையாக தடுப்பூசி போட்ட பயணிகளுக்குக்கூட கொவிட்-19 கிருமி வகைகள் தொற்றக்கூடும். அவர்களும் கிருமியைப் பரப்பக்கூடும்," என்று நிலையம் செவ்வாய் அன்று குறிப்பிட்டிருந்தது.
அவ்வாறு 'தெரியவில்லை' என்று வகைப்படுத்தப்பட்ட நாடுகளில் ஆப்கானிஸ்தான், வடகொரியா, கம்போடியா, சிரியா உள்ளிட்டவையும் அடங்கும்.
"தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், நமக்கு நமது சூழ்நிலை நன்கு தெரியும்," என்று திரு ஓங் இன்று தெரிவித்தார்.
சிங்கப்பூரில் ஒவ்வொரு வாரமும் 150,000க்கும் அதிகமான பிசிஆர் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தினமும் 21,000க்கும் மேற்பட்ட பிரிஆர் சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் திரு ஓங் கூறினார்.
இவற்றுள், 2 விழுக்காட்டுக்குக் குறைவான பரிசோதனைகள் கிருமித் தொற்று உள்ளது என்பதை உறுதிசெய்வதாக அவர் குறிப்பிட்டார்.