சிங்கப்பூருக்கான பயண ஆலோசனையை மாற்றவுள்ள அமெரிக்கா
அமெரிக்க நோய் கட்டுப்பாட்டுத், தடுப்பு நிலையம், சிங்கப்பூரின் கொவிட்-19 பரிசோதனைத் தரவுகளின் தொடர்பில், அதன் சுகாதார அமைச்சுடன் சேர்ந்து பணியாற்றி வருகிறது.
அந்த நிலையம் புளூம்பெர்க் செய்தி நிறுவனத்திடம் இத்தகவலை வியாழக்கிழமை (ஜனவரி 6) அன்று தெரிவித்தது.
மேலும் அதற்கேற்ப சிங்கப்பூரின் பயண சுகாதார அறிக்கையை அமெரிக்க நோய் கட்டுப்பாட்டுத், தடுப்பு நிலையம் மாற்றி அமைக்கும்.
நிலையம் சில நாள்களுக்கு முன்னர் சிங்கப்பூருக்கான அதன் பயண அறிக்கையை மாற்றியது.
அதில் இங்கு பயணம் செய்வதைத் தவிர்க்கும்படி அது அமெரிக்கர்களை அறிவுறுத்தியது.
அத்துடன் சிங்கப்பூரில் கிருமிப் பரவல் சூழலை 'தெரியவில்லை' என்று நிலையம் வகைப்படுத்தியது.
போதிய பரிசோதனை முடிவுகள் கிடைக்காததால் அந்த நடவடிக்கையை எடுத்ததாக நிலையம் புளூம்பெர்க்கிடம் கூறியிருந்தது.
'அவர் வர்ல்ட் இன் டேட்டா' (Our World in Data) எனும் தகவல் திரட்டு இணையத்தளத்தில் அது அந்தத் தகவல்களைப் பெற்று வந்தது.
'தெரியவில்லை' என்ற பிரிவில் ஆப்கானிஸ்தான், சிரியா, வடகொரியா போன்ற நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
கொவிட் -19 தொடர்பான அதன் தகவல்களை அமெரிக்க நோய் கட்டுப்பாட்டுத், தடுப்பு நிலையத்துடன் பகிர்ந்துகொள்ள இருப்பதாக சிங்கப்பூர் கூறியது.
மேலும், "நாம் நம் சூழ்நிலையை நன்கு அறிவோம்," என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் செய்தியாளர்களிடம் கூறினார்.
சிங்கப்பூரில் ஒரு வாரத்தில் 150,000க்கும் மேற்பட்ட பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் அப்போது தெரிவித்தார்.