சிங்கப்பூருக்கும் பிந்தான், பாத்தாம் தீவுகளுக்கும் இடையே 'விடிஎல்' தொடங்க திட்டம்
இந்தோனீசியாவின் பாத்தாம், பிந்தான் தீவுகளை சிங்கப்பூரிலிருந்து பொழுதுபோக்குக்காகச் செல்லும் பயணிகளுக்கு மீண்டும் திறந்துவிடப்படவுள்ளன.
சிங்கப்பூருக்கும் அந்தத் தீவுகளுக்குமான தடுப்பூசிப் பயணப் பாதைகளைத் தொடங்கும் திட்டம் இறுதிக் கட்டத்தில் உள்ளது.
இந்தோனேசியாவின் பொருளியல் விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் அயிர்லாங்கா ஹர்ட்டார்ட்டோ திங்கள் (ஜனவரி அன்று) இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
கொவிட்-19 கிருமிப் பரவலை அடுத்து, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக பாத்தாமுக்கும் பிந்தானுக்குமான பயணங்கள் முடங்கிப் போய் இருந்தன.
தற்போது இரண்டு தீவுகளிலும் கொவிட்-19 தொற்றுப் பரவல் கட்டுக்குள் இருப்பதால் அங்கு தடுப்பூசிப் பயணப் பாதையைத் தொடங்க அரசாங்கம் தயாராய் இருப்பதாக அவர் கூறினார்.
தடுப்பூசிப் பயணப் பாதை சுற்றுப்பயணத் துறை வளர்ச்சியைத் தூண்டும் என்றார் திரு ஹர்ட்டார்ட்டோ.
இருப்பினும் தடுப்பூசிப் பயணப் பாதைகள் தொடங்கும் தேதியை அவர் அறிவிக்கவில்லை.
சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ இருவரும் செவ்வாய்க்கிழமை பிந்தான் தீவில் தலைவர்களின் தனிப்பட்ட சந்திப்பை நடத்தவுள்ளனர்.
இந்நிலையில் இந்தோனீசியா தடுப்பூசி பயணப் பாதைத் திட்டத்தை அறிவித்துள்ளது.
தடுப்பூசிப் பயணப் பாதையின்கீழ், சிங்கப்பூரிலிருந்து செல்லும் பயணிகள், முழுமையாக தடுப்பூசி போட்டிருக்கவேண்டும்.
பாத்தாம், பிந்தானுக்குள் நுழையும் முன்னர் அவர்கள் குறைந்தது 14 நாள்கள் சிங்கப்பூரில் தங்கியிருக்க வேண்டும்.
சிங்கப்பூரிருந்து புறப்படுவதற்கு மூன்று நாள்களுக்குள் அவர்கள் பிசிஆர் பரிசோதனை செய்திருக்க வேண்டும்.
அதே போல இந்தோனீசியாவிலும் அவர்கள் பிசிஆர் பரிசோதனைக்குச் செல்ல வேண்டும்.