சிங்கப்பூரில் புதிதாக 6,888 பேருக்கு கொவிட்-19; தொற்று அதிகரிப்பு குறித்து நிபுணர்கள் விளக்கம்
சிங்கப்பூரில் நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகல் நிலவரப்படி, புதிதாக 6,888 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. திங்கள்கிழமை பதிவாகியிருந்த 2,587 தொற்று பாதிப்புகளைவிட இது கணிசமாக அதிகம்.
பொதுவாக செவ்வாய்க்கிழமைகளில் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பது வழக்கம். வாரயிறுதியில் பலரும் வெளியே சென்று சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டு கலந்துறவாடுவது இதற்குக் காரணம்.
கடந்த வாரயிறுதியில் எஃப்1 கார் பந்தயம் நடைபெற்றதைத் தொடர்ந்து, தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நடந்தேறிய பந்தயத்தைக் காண 300,000க்கும் அதிகமான பார்வையாளர்கள் வந்திருந்தனர். கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக கடந்த ஈராண்டுகளாக எஃப்1 நடைபெறவில்லை.
நோய்த்தொற்று அதிகரித்திருப்பது வியக்கத்தக்கது என்று கருத்துரைத்த தொற்றுநோய் நிபுணர் லியோங் ஹோ நாம், எஃப்1 பந்தய வாரயிறுதியின்போது நடைபெற்ற விழாக்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்றார்.
எனினும், புதியவகை கிருமிகளுக்குக்கூட நோயரும்பு காலம் (incubation period) மூன்று முதல் நான்கு நாள்களுக்கு இடைப்பட்டிருக்கலாம் என்று தொற்றுநோய் நிபுணர் பால் தம்பையா கூறினார். கடந்த வாரயிறுதியில் நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களிடம் அதற்குள் தொற்று உறுதிசெய்யப்படும் சாத்தியம் குறைவு என அவர் சொன்னார்.
எஃப்1 ஒருபுறமிருக்க, அதிகமானோர் சிங்கப்பூருக்கு வந்துசெல்வதும் தொற்று அதிகரிக்க மற்றொரு காரணமாக இருக்கலாம் என்று பேராசிரியர் தம்பையா கருதினார்.
“சாங்கி விமான நிலையத்தின் நான்காம் முனையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து அதிகமானோர் சிங்கப்பூருக்கு வருகின்றனர். விடுமுறையைக் கழிப்பதற்காக சிங்கப்பூரர்களும் வெளிநாடு செல்கின்றனர்,” என்று அவர் விவரித்தார்.
நேற்றைய நிலவரப்படி மருத்துவமனைகளில் 286 பேர் கொவிட்-19க்காக சிகிச்சை பெற்று வந்ததாக சுகாதார அமைச்சின் இணையப் பக்கத்தில் நேற்று தகவல் வெளியிடப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 11 பேர் உள்ளனர். 28 பேருக்கு உயிர்வாயு ஆதரவு தேவைப்படுகிறது.