திருவனந்தபுரம்: ஐரோப்பிய நாடான போலந்தில் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளையர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
திருச்சூரைச் சேர்ந்த சூரஜ், 23, என்ற அந்த இளையர், கடந்த ஐந்து மாதங்களாக போலந்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலைசெய்து வந்தார்.
இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (29-01-2023) ஜார்ஜியாவைச் சேர்ந்த சிலருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, அக்கும்பல் சூரஜைக் குத்திக்கொன்றது. அவருடன் இருந்த மேலும் நான்கு கேரள இளையர்களும் இந்தத் தாக்குதலில் காயமுற்றனர்.
போலந்துத் தலைநகர் வார்சாவில் உள்ள இந்தியத் தூதரகம் சூரஜின் மரணத்தை உறுதிப்படுத்தியதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அண்மையில், கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த இப்ராகிம் ஷெரிஃப் என்ற ஆடவர் போலந்தில் உள்ள ஒரு குடியிருப்பில் மாண்டுகிடந்தார். ஷெரிஃப் அங்குள்ள தனியார் வங்கி ஒன்றில் தகவல் தொழில்நுட்பப் பொறியாளராகப் பணியாற்றி வந்த நிலையில்,
இம்மாதம் 24ஆம் தேதியிலிருந்து அவரைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை. அதன்பின்னரே அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது.
அவர் குடியிருந்த வீட்டின் உரிமையாளரான எமில் என்பவரே அவரைக் கொலைசெய்துவிட்டார் என்று போலந்துக் காவல்துறை, இந்தியத் தூதரகத்திற்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்தது. எமில் பின்னர் கைதுசெய்யப்பட்டார்.
ஷெரிஃப் கொல்லப்பட்டதற்கான காரணம் அதிகாரபூர்வமாக இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று அவரின் குடும்பத்தினர் கூறியதாக ஐஏஎன்எஸ் செய்தி தெரிவித்தது.