கோல்கத்தா: இந்திய தேசியப் புலனாய்வு அதிகாரிகள் சென்ற வாகனத்தின்மீது கல்வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றது அதிர்ச்சி அளித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம், பூர்வ மெதினிபூர் மாவட்டம், பூபதிநகர் பகுதியில் சனிக்கிழமை (ஏப்ரல் 6) இச்சம்பவம் நிகழ்ந்தது.
கடந்த 2022ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பில் விசாரிக்கச் சென்றபோது, அதிகாரிகள் இருந்த வாகனத்தின்மீது உள்ளூர்வாசிகள் கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, சனிக்கிழமை காலையில் அந்தக் குண்டுவெடிப்பு தொடர்பில் இருவரைப் புலனாய்வு அதிகாரிகள் குழு கைதுசெய்தது. அதன்பின் கோல்கத்தா திரும்பியபோது அவர்கள் வாகனம் தாக்கப்பட்டது.
“உள்ளூர்வாசிகள் வாகனத்தைச் சுற்றி வளைத்து, கற்களை வீசினர். அதில் தன் அதிகாரி ஒருவர் காயமடைந்ததாக புலனாய்வுப் பிரிவு தெரிவித்தது,” என்று காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறினர்.
இதன் தொடர்பில் புலனாய்வுப் பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாகவும் அவர் சொன்னார்.
இதனையடுத்து, மத்தியக் காவல்படையினர் பலர் பூபதிநகர் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2022 டிசம்பர் 3ஆம் தேதி பூபதிநகரிலிருந்த ஒரு குடிசை வீட்டில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் மூவர் கொல்லப்பட்டனர். பின்னர் அச்சம்பவம் தொடர்பான விசாரணை தேசிய புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இவ்வாண்டு ஜனவரி 3ஆம் தேதி, பொது விநியோக மோசடி தொடர்பில் விசாரிக்க வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திற்குச் சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள் தாக்கப்பட்டதை நினைவுகூர்வதாக அண்மைய சம்பவம் அமைந்துள்ளது.