திண்டுக்கல்: காங்கிரஸ், பாஜகவினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக திண்டுக்கல்லில் பதற்றம் நிலவியது.
இருதரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கல்வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்ததாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.
இதையடுத்து இருதரப்பையும் சேர்த்து 150 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
திண்டுக்கல் மாநகர காங்கிரஸ் கட்சித் தலைவர் துரை மணிகண்டன் சமூக வலைத் தளங்களில் பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பதிவிட்டு வருகிறார் என்று பாஜகவினர் புகார் எழுப்பியுள்ளனர்.
எனவே அவரைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பாஜக சார்பில் திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளரிடம் சில நாள்களுக்கு முன்பு மனு அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், துரை மணிகண்டனைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை யுடன் வெள்ளிக்கிழமை மாலை பாஜகவினர் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் இருந்த காங்கிரஸ் கட்சி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. அதிக எண்ணிக்கையிலான பாஜகவினர் குவிந்ததை அடுத்து காங்கிரஸ் கட்சியினரும் தங்கள் அலுவலகத்திற்கு திரளாக வந்து சேர்ந்தனர்.
ஒரு கட்டத்தில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை நோக்கி பாஜகவினர் முன்னேற முயன்றபோது காவல்துறையினரால் தடுக்கப்பட்டனர்.
இதைக் கண்ட காங்கிரசார் கட்சி அலுவலகத்தை விட்டு வெளியே வந்து பாஜகவிற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் வசைபாடிய நிலையில் திடீரென காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை நோக்கி கற்கள் பறந்து வந்தன.
இதையடுத்து, கல்வீச்சில் ஈடுபட்ட சிலரை காங்கிரசார் பிடிக்க முயன்றனர். அதற்குள் காங்கிரஸ் தரப்பில் இருந்தும் சிலர் கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது.
இருதரப்பினரும் கல்வீச்சில் தீவிரமாக ஈடுபட்டதை அடுத்து காவல்துறையினர் மோதலை நிறுத்துமாறு எச்சரிக்கை விடுத்தனர்.
அதையும் மீறி கல்வீச்சில் ஈடுபட்ட 150 பேர் கைது செய்யப்பட்டு திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள இரண்டு திருமண மண்டபங்களில் தனித்தனியே அடைக்கப்பட்டனர்.
மோதல் நிகழ்ந்த பகுதியில் தற்போது அமைதி நிலவி வருகிறது என்றும் பொது அமைதிக்குப் பங்கம் ஏற்பட்டால் உடனடியாக உரிய நடவடிக்கை பாயும் என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது.