கொரோனா வைரஸ் தடுப்பு காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவுநடப்பில் உள்ளது. அதன் காரணமாக விமான சேவைகள் முடங்கின.
வெளிநாடுகளில் சிக்கித் தவித்து, தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்களை படிப்படியாக மீட்டு அழைத்து வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி கடந்த 7ஆம் தேதி முதல் பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியர்களை ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் மூலம் மத்திய அரசு அழைத்து வருகிறது.
முதல்கட்ட மீட்பு நடவடிக்கைகள் இன்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட மீட்பு பணியின்போது 30,000 இந்தியர்கள் தாயகத்துக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று இந்தியாவின் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வரும் ‘வந்தே பாரத்’ திட்டத்தின் முதல் கட்டத்தில் இம்மாதம் 7ஆம் தேதி முதல் 14ஆம் தேதிக்குள் 14,800 இந்தியர்கள் 12 நாடுகளிலிருந்து 62 விமானங்களில் கட்டண அடிப்படையில் அழைத்து வரப்பட்டனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர், மலேசியா, குவைத், ஐக்கிய அரபு சிற்றரசுகள், பஹ்ரைன், அமெரிக்கா ஆகிய நாடுகளிலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணி கடந்த வெள்ளிக்கிழமை (மே 8) தொடங்கியது.
சிங்கப்பூரிலிருந்து 234 பயணிகளுடன் முதல் விமானம் மே 8 அன்று காலை 11.26 மணிக்கு இந்தியாவில் தரையிறங்கியது.
அபுதாபி, துபாய் ஆகிய வளைகுடா நாடுகளிலிருந்து 363 பயணிகளுடன் 2 விமானங்கள் மே 8 அன்று கேரளாவுக்குச் சென்று சேர்ந்தன.
இந்தத் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணி இம்மாதம் 16ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படுகிறது. இதில் 31 நாடுகளுக்கு 149 விமானங்கள் இயக்கப்படும். அதில் 30,000 இந்தியர்கள் அழைத்து வரப்படுவார்கள் என தெரிவித்தார்.
முழுமையான செய்தியைப் படிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online