பனிபடர்ந்த பள்ளத்தாக்கில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது தமக்கு மகள் பிறந்ததால் அவருக்கு Snow White என்று பெயர் வைக்கலாம் என்று தொலைபேசி உரையாடலின்போது கணவர் குறிப்பிட்டதற்கு கேலி பேசி சிரித்த 23 வயது ஓஜாவுக்கு அடுத்த 16 மணி நேரத்தில், அவரது கணவர் உயிரிழந்த தகவல் கிடைத்தது.
“மகளுக்குப் பெயர் வைக்கும் விழாவில் தந்தை குண்டன் வந்து கலந்துகொள்வார் என்று எதிர்பார்த்திருந்தோம்; ஆனால், இப்போது அவரது இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறோம்,” என்று கண்ணீருடன் குறிப்பிட்டார் ஓஜா. குழந்தை பிறந்து 18 நாட்களே ஆன நிலையில் இன்று தமது கணவரின் உடலைப் பெறுவதற்காகக் காத்திருந்தபோது இவ்வாறு குறிப்பிட்டார் ஓஜா.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலில் உயிரிழந்த 20 பேரில் திரு குண்டனும் ஒருவர்.
கல்வான் பள்ளத்தாக்கு சண்டையில் உயிரிழந்தவர்களின் உடல்களை அரசாங்கம் அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைத்தது.
இந்த மோதலுக்கு இரு நாடுகளும் ஒன்றையொன்று குறைகூறினாலும், இந்தப் பிரச்சினையை வலுக்கவிடாமல் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க ஒப்புக்கொண்டுள்ளன.
சீன படைகள் ஆணிகள் பதிக்கப்பட்ட மூங்கில் கம்புகளைக் கொண்டு இந்தியப் படையினரைத் தாக்கியதாக, உயிர்பிழைத்த இந்திய வீரர்கள் தெரிவித்தனர். பூச்சியத்துக்கும் குறைவான வெப்பநிலை நிலவக்கூடிய அந்தப் பள்ளத்தாக்கில், இந்திய வீரர்கள் குச்சிகளையும் கற்களையும் பயன்படுத்தி தாக்கினர்.
1990ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையில் செய்யப்பட்ட ஒப்பந்தப்படி, இருநாட்டுப் படைகளும் எல்லையில் ஆயுதங்களை வைத்திருக்கலாம்; ஆனால், அவற்றைப் பிரயோகிக்க முடியாது.
உயிரிழந்த இந்திய வீரர்களின் குடும்பத்தார், மாண்டவர்களுக்கு நியாயம் கோரினர். பிரதமர் நரேந்திர மோடி சீனாவை ஏதாவது ஒரு வழியில் தண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
எல்லையில் சீனப் படைகளுடனான தங்களது மோதல்கள், குச்சிகளைக் கொண்டு இருபுறமும் எறிவது, தள்ளிவிடுவது போன்ற சிறுபிள்ளைத்தனமானதாக இருக்கும் என்று தம் கணவர் முன்பு குறிப்பிட்டதை நினைவுகூர்ந்த ஓஜா, “சீனப் படைகளை நம்பியது நமது தவறு; அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்,” என்றார்.
இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்தால் இந்தியர்கள் அனைவரும் சீனாவுக்கு எதிராக ஒன்று திரள்வர் என்று தமது மகனின் உடலைப் பெறுவதற்காகக் காத்திருந்த திரு கிஷோர் சிங் குறிப்பிட்டார்.
“கொவிட்-19 கொள்ளைநோய் காலத்திலும் சீனா தனது கடுமையான வேகத்தைக் காட்டியுள்ளது. உலக நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக இருந்து சீனாவைத் தண்டிக்க வேண்டும்,” என்றார் ஓய்வு பெற்ற ஆசிரியரான திரு சிங்.
இந்த மோதலில் உயிரிழந்த தமிழக வீரர் பழனியின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online