இந்தித் திணிப்புக்கு எதிரான வாசகங்கள் கொண்ட டி-சட்டைகளுக்கு வெளிநாடுகளிலும் வரவேற்பு

இந்தித் திணிப்புக்கு எதிரான வாசகங்கள் கொண்ட டி-சட்டைகளுக்கு வெளிநாடுகளிலும் வரவேற்பு

2 mins read
6dce58af-126d-47ec-b084-32c0a89306c8
தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி. கனிமொழியின் டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட படம். -
Google News Preferred Icon

இந்தி மொழி தெரியாததால் விமான நிலையத்தில், தமிழக எம்.பி. கனிமொழி, இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் எதிர்கொண்ட கசப்பான சம்பவங்கள் அண்மையில் பரபரப்பாகப் பேசப்பட்டன.

'தமிழ்ப் பெருமை (Tamil Pride)' இயக்கத்தை ஆதரிக்கும் விதத்தில் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, நடிகர் சாந்தனு, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட ஏராளமான நடிகர், நடிகைகள் இந்தித் திணிப்புக்கு எதிரான டி-சர்ட்டுகளை அணிந்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள். இவர்கள் டி-சர்ட்டுகள் அணிந்த புகைப்படங்கள் சமூகவலைத் தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டன.

இந்தித் திணிப்புக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் #ஹிந்தி_தெரியாது_போடா #StopHindiImposition என்ற 'ஹேஷ்டேக்'குகளும் பிரபலமாகின.

இத்தகைய வாசகங்கள் பொறிக்கப்பட்ட டி-சட்டைகளைக் குறிப்பிட்டு, திமுக எம்.பி. கனிமொழி தனது டுவிட்டர் பதிவில், "டி-சட்டைகளை அச்சிட்டபோது, இந்தி எதிர்ப்புக்கு எதிராக, நமது முன்னோர்களைப்போல, இளையர்களும் ஆர்ப்பரித்து எழுவர் என்றும் பாகுபடுத்தும் நடைமுறைகளுக்கு எதிராகப் போராடுவார்கள் என்றும் எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை," என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன் தொடர்பில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய எம்.பி. கனிமொழி, "இந்தி மொழி தெரியாது என்பதற்காக நான் எந்த விதத்திலும் குறைவான இந்தியர் இல்லை," என்றார்.

"இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி இல்லை. அவ்வாறு பலரும் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர். இந்தி மொழி பேச பலருக்கும் அழுத்தம் தரப்படுகிறது," என்றும் அவர் குறிப்பிட்டார்.

அண்மைய புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 43.6 விழுக்காட்டினர் இந்தி மொழி பேசுகின்றனர்; ஆனால் அது அங்கு தேசிய மொழி இல்லை. ஆங்கிலம், தமிழ், இந்தி உட்பட 23 மொழிகள் இந்தியாவின் அலுவலக மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகப் பேசப்படும் 'இந்தி பேசத் தெரியாது... போடா', 'நான் ஒரு தமிழ் பேசும் இந்தியன்' என்பது போன்றவற்றைக் குறிக்கும் ஆங்கில வாசகங்கள் பொறிக்கப்பட்ட டி-சட்டைகளுக்கு உள்நாட்டிலும் அமெரிக்கா போன்ற வெளி நாடுகளிலும் மிகுந்த வரவேற்பு இருப்பதால் திருப்பூரில் உள்ள ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் அத்தகைய டி-சட்டைகளைத் தயாரித்து குவித்து வருகின்றன.

"'இந்தி தெரியாது போடா' என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வாசகங்கள் கொண்ட டி-சட்டைகளுக்காக, தமிழகம் மட்டுமின்றி அமெரிக்க வாழ் தமிழர்களிடம் இருந்தும் எங்களுக்கு ஆர்டர் வருகிறது. இதுவரை 6,000 டி-சட்டைகள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் ஆர்டர்கள் வந்தபடி உள்ளன. நேற்று மட்டும் அமெரிக்காவில் இருந்து 5,000 டி-சட்டைகளுக்கு ஆர்டர்கள் வந்துள்ளன," என்று அந்த தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் கார்த்திகேயன் குறிப்பிட்டார்.

ஒரு டி-சட்டையின் விலை ரூ.200. இத்தகைய டி-சட்டைகளைத் தயாரித்து இருப்பு வைக்கவும் திட்டமிடுகிறது நிறுவனம்.

இதுபோல், "மொழியைக் கற்பது என் உரிமையடா' என்ற வாசகம் அச்சிட்ட டி-சட்டைகளுக்கும் தற்போது ஆதரவு பெருகி வருகிறது.

குறிப்புச் சொற்கள்