இந்திய-சீன எல்லைப் பகுதியில் இருநாட்டு ராணுவ வீரர்களும் மோதிக்கொண்டதாகவும் அதில் இருதரப்பினரும் காயமுற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிக்கிம் மாநிலத்தின் வடபகுதியில், கிட்டத்தட்ட 5,000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள நாகு லா கணவாய்ப் பகுதியில் கடந்த வாரம் அந்த மோதல் இடம்பெற்றதாகக் கூறப்பட்டது.
சீன ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றதை அடுத்து, மோதல் வெடித்ததாகச் சொல்லப்பட்டது.
இந்நிலையில், “இம்மாதம் 20ஆம் தேதி வடக்கு சிக்கிமின் நாகு லா பகுதியில் இந்திய-சீன ராணுவத்தினருக்கு இடையே சிறிய அளவிலான மோதல் சம்பவம் நிகழ்ந்தது. ஆயினும், அங்கிருந்த படைப்பிரிவுத் தளபதிகள் அந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டனர்,” என்று இந்திய ராணுவம் விளக்கமளித்துள்ளது.
நாகு லா கணவாய்ப் பகுதியில் இந்திய-சீன வீரர்கள் மோதிக்கொண்டது கடந்த ஓராண்டில் இது இரண்டாவது முறை. சென்ற ஆண்டு மே 9ஆம் தேதி நூற்றுக்கு மேற்பட்ட ராணுவ வீரர்கள் மோதிக்கொண்டதில் இந்திய வீரர்கள் நால்வரும் சீன ராணுவத்தினர் எழுவரும் காயமடைந்தனர்.
வழக்கமாக, நாகு லா கணவாய்ப் பகுதி மோதல் இடம்பெறும் பகுதியல்ல எனக் கூறப்படுகிறது.
கடந்த மே மாதம் லடாக் பகுதியில் இந்தியா-சீனா இடையே எல்லைப் பிரச்சினை எழுந்ததை அடுத்து, இரு நாட்டு ராணுவத்தினரும் இதுவரை குறைந்தது நான்கு முறை மோதிக்கொண்டுள்ளனர்.
குறிப்பாக, ஜூன் 14ஆம் தேதி கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர்; சீனத் தரப்பிலும் உயிரிழப்பு நிகழ்ந்தது.
இதற்கிடையே, நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை ராணுவ அளவில் ஒன்பதாவது கட்டப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. ஏறத்தாழ 15 மணி நேரம் இடம்பெற்ற அப்பேச்சுவார்த்தை அதிகாலை 2.30 மணியளவில் முடிவடைந்ததாகத் தகவல்கள் கூறின.
இப்படி ஒருபுறம் ராணுவ அளவிலும் அரசதந்திர அளவிலும் பேச்சுவார்த்தை நடந்து வந்தாலும், இரு நாடுகளும் கிழக்கு லடாக்கில் நூறாயிரம் வீரர்களைக் குவித்து வைத்துள்ளதால் அங்கு இன்னும் பதற்றம் நீடித்து வருகிறது.
பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாதவரை, கிழக்கு லடாக்கில் இந்தியப் படைகள் முகாமிட்டிருக்கும் என்று இம்மாதம் 12ஆம் தேதி ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே தெரிவித்திருந்தார்.
அதேபோல, எல்லையில் குவித்துள்ள தனது படைகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கையை சீனா தொடங்காதவரை, இந்தியாவும் படைகளைக் குறைத்துக்கொள்ளாது என்று இந்தியத் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சில நாள்களுக்குமுன் கூறியிருந்தார்.
அண்மையில் அருணாச்சலப் பிரதேசத்தில் ஒரு சிறு கிராமத்தை கட்டி எழுப்பியிருக்கும் சீனா, அப்பகுதி தனக்குச் சொந்தமானது என்று பல்லாண்டு காலமாக உரிமை கொண்டாடி வருகிறது.
கடந்த 1962ஆம் ஆண்டு இரு நாடுகளும் போரிட்ட நிலையில், எல்லைப் பிரச்சினை நீடிப்பதற்குக் காரணமாக ஒன்றையொன்று மாற்றி மாற்றி குற்றஞ்சாட்டி வருகின்றன.