தமது காதலனை கைப்பிடிப்பதற்காக தமது வீட்டை விட்டு வெளியேறிய பெண் ஒருவர், திருமணம் செய்து தமது கணவனோடு அவரது பெற்றோர் வசிக்கும் ஒரே வீட்டில் யாருக்கும் தெரியாமல் 10 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் வசித்த வீடு பெண்ணின் பெற்றோர் வசித்த வீட்டிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில்தான் இருந்திருக்கிறது. அவர்கள் கண்ணில்கூட இந்தத் தம்பதி படவில்லை.
இந்தச் சம்பவம் இந்தியாவின் கேரள மாநிலம், பாலக்காட்டில் இடம்பெற்றுள்ளது.
2010ஆம் ஆண்டு தாம் காதலித்த ரஹ்மான் என்ற இளையருடன் தமது 18 வயதில் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் சஜீத்தா எனும் அப்பெண். இவரை தேடிய பெற்றோரும் உறவினரும் ஒரு கட்டத்தில் தங்களது முயற்சியில் ஓய்ந்துபோய்விட்டனர்.
நிறப்பூச்சு பூசும் வேலை செய்யும் ரஹ்மான், இயல்பில் யாருடனும் பேசுகின்ற சுபாவம் அற்றவர் என்றும் வீட்டில் தமது அறைக்கதவை யாராவது தட்டினால்கூட கடுங்கோபம் கொள்பவர் என்றும் உறவினர்கள் கூறினர்.
கடந்த 10 ஆண்டுகளாக ரஹ்மான் வீட்டில் அவரது அறையில் வசித்து வந்த சாஜித்தா, தமது கணவர் வேலைக்கு போன பின்னர், காதில் ‘இயர்ஃபோன்’ மாட்டிக்கொண்டு தொலைக்காட்சி பார்த்து நேரத்தை ஓட்டியிருக்கிறார்.
ரஹ்மானின் பெற்றோர் வீட்டில் இல்லாத சமயம், சன்னலில் ஓட்டைவைத்து வெளியில் சென்று வந்திருக்கிறார் என்றும் தெரிய வந்துள்ளது.
மூன்று மாதங்களுக்கு முன்னர், ரஹ்மானுக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைப்பதற்கு ரஹ்மானின் பெற்றோர் பேச்சை தொடங்கியபோது, அவருக்கும் பெற்றோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து, ரஹ்மானும் சஜீத்தாவும் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர். வேறோர் ஊருக்குச் சென்று வசித்து வந்தனர். பின்னர் ஒரு நாள், ரஹ்மானின் உறவினரால் ரஹ்மான் வீதியில் கண்டுபிடிக்கப்பட்டார்.
இந்த விவகாரம் போலிசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.