மும்பையில் பிறந்து வளர்ந்தவர் இந்த 17 வயது பெண் அஸ்மா ஷேக். இவரது தாத்தா காலத்தில் இவரின் குடும்பம் மும்பைக்கு வந்தது. அன்றிலிருந்து இவரது குடும்பம் இங்கு வசித்து வருகிறது.
தெருவோரம்தான் இவர்களின் வசிப்பிடம். அஸ்மாவும் தனது குழந்தைப்பருவம் முழுவதும் நடைபாதையை வசிப்பிடமாக கொண்டு வாழ்ந்தார்.
இதற்கிடையே, கொவிட்-19 சூழல் இவரது குடும்பத்துக்கு பெரும் சோதனையாக அமைந்தது. தெருவோரத்தில் பழச்சாறு கடை நடத்தி வந்த இவரின் தந்தை, முடக்கநிலை காரணமாக தனது வருமானத்தை இழந்தார்.
இவ்வளவு சிரமத்திற்கு மத்தியிலும் முழு மனஉறுதியுடன், கடினமாக படித்து வெற்றிகரமான வாழ்க்கையை உருவாக்க அஸ்மா விரும்புகிறார். தனது பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும் என்று கனவு கண்டு வருகிறார்.
அவர்கள் தவறவிட்ட அனைத்தையும் அவர்களுக்கு வழங்க முடியும் என்று நம்பி அதற்கான முயற்சியில் இவர் இறங்கியிருக்கிறார்.
அண்மையில் பிபிசி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், பட்டப்படிப்பு வரை படித்து சொந்த வீடு வாங்குவதற்கு போதுமான பணம் சம்பாதிக்க விரும்புவதாக தனது ஆசையை அஸ்மா வெளிப்படுத்தியிருந்தார்.
2020ஆம் ஆண்டில் தனது 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற அஸ்மா, தற்போது 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்கு மத்தியில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் நூலகங்களை மூட அரசு முடிவு செய்தது.
இதன் காரணமாக, நடைபாதையில் அமர்ந்து இணைய வகுப்புகளில் அஸ்மா கலந்துகொள்ள வேண்டியிருந்தது. இதைச் செய்வது எளிதல்ல. வீதியில் செல்லும் வாகனங்களால் இடையூறுகள் இருந்தன, சில நேரங்களில் போதுமான வெளிச்சம் கிடைக்கவில்லை, இது படிப்பை சிரமமாக்கியது. அதுபோக, போலிசார் அடிக்கடி சுற்றுக்காவல் பணியில் ஈடுபடுவது மற்றொரு தடையாக இருந்தது.
இதேபோல் மற்ற சில சிரமங்களையும் அஸ்மாவும் இவரின் தாயும் எதிர்கொண்டனர். நடைபாதையில் செல்லும் ஆண்கள் அவர்களைத் தொந்தரவு செய்வது மட்டுமல்லாமல், சில சமயங்களில், இரவில் அவர்கள் அருகில் படுத்துக்கொண்டு தொந்தரவை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், அஸ்மா சந்தித்து வரும் சிரமங்களும் இவரின் கதையும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய பிறகு இவருக்கு உதவ பலரும் முன்வந்தனர். மும்பையைச் சேர்ந்த ‘ஏர் கேர்கேக்கர்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒவ்வொரு மாதமும் ரூ.3000 மற்றும் இவரது கல்விக்கு நிதியுதவி அளித்து வருகிறது.
வெளிநாட்டில் வசிக்கும் மக்கள்கூட நிதி திரட்டி அஸ்மா குடும்பத்திற்கு ரூ.1.2 லட்சம் அளித்துள்ளார்கள். இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு சிறிய வீடு மற்றும் அடிப்படை வசதிகளைப் பெற அஸ்மா முடிவு செய்தனர்.
சில நாள்களுக்கு முன் அஸ்மா குடும்பத்தினர் ஒரு சிறிய வீட்டில் குடியேறி இருக்கின்றனர்.