இரும்புப் பிடியில் சிக்கிய இந்திய மக்களின் கடைசி தற்காப்புக் கேடயம் தங்கம்

இரும்புப் பிடியில் சிக்கிய இந்திய மக்களின் கடைசி தற்காப்புக் கேடயம் தங்கம்

2 mins read
e9e5fed3-544e-4792-a38d-3ae8a7bd1867
படம்: ஏஎஃப்பி -
Google News Preferred Icon

ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளியல் நாடான இந்தியா கொவிட்-19 நெருக்கடியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தாலும் அந்நாட்டின் மக்களில் பலர் நிதிப் பிரச்சினையில் இருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர்.

வர்த்தக முடக்கம், வேலை இழப்பு போன்ற காரணங்களால் கடந்த ஆண்டு 230 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் வறுமையின் பிடியில் சிக்கியதாக ஆஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழக கருத்தாயவு ஒன்று தெரிவிக்கிறது.

வாடகை, பள்ளிக்கூடக் கட்டணங்கள் மற்றும் மருத்துவக் கட்டணங்களைச் செலுத்த ஏராளமான மக்கள் சிரமப்பட்டு வருவதாக அது குறிப்பிடுகிறது.

தீப்பட்ட காயத்தில் தேள் கொட்டியதுபோல மின்சாரம், எரிபொருள், இன்னபிற பொருட்களின் அண்மைய விலை ஏற்றம் அவர்களின் அன்றாட வாழ்கையை மேலும் கடினமாக்கி உள்ளது.

பிழைக்க வேறு வழி இல்லாததால் வீட்டில் சீதனமாகவும் சேமிப்பாகவும் வைத்திருக்கும் நகைகளை விற்க பலரும் முன்வந்துள்ளதாக ஏஎஃப்பி செய்தி தெரிவிக்கிறது.

மும்பை நகைக்கடை வீதியில் நகையை விற்க வந்த கவிதா ஜொகானி, 45, என்னும் பெண்மணியை ஏஎஃப்பி செய்தியாளர் சந்தித்தபோது, "23 ஆண்டுகளுக்கு முன்னர் எனது திருமணத்தின்போது நான் வாங்கிய தங்க வளையல்களை விற்க வந்துள்ளேன். வாழ்க்கை கடினமாகிவிட்டது," என்றார்.

வாங்கிய கடன் வட்டியோடு சேர்த்து தங்களது வாழ்க்கையை விழுங்கிவிடக் கூடாது என்ற அச்சத்தில் சிறு வர்த்தகர்களும் தங்களைக் காக்கும் கடைசி தற்காப்புக் கேடயமாக தங்கத்தைக் காசாக்கி வருவதாக அச்செய்தி குறிப்பிடுகிறது.

"இவ்வளவு அதிகமான மக்கள் தங்கம் விற்பதை என் வாழ்நாளில் இதுவரை கண்டதில்லை," என்று குமார் ஜெயின், 63, என்பவர் கூறினார்.

இவரது குடும்பம் மும்பையின் வர்த்தகப் புகழ்பெற்ற ஜாவேரி பஜாரில் 106 ஆண்டுகளாக நகைக் கடை நடத்தி வருகிறது.

"கொள்ளைநோய் பரவுவதற்கு முன்னர் இப்படி ஒரு நிலை ஏற்பட்டதில்லை," என்றும் அவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்