தனது மேளத்துடன் ஊர் ஊராக, கடை கடையாகச் சென்று யாசகம் கேட்டு பிழைக்கும் சேட்டு என்ற பூம் பூம் மாட்டுக்காரர் மணல்மேடு என்ற ஊரில் தென்பட்டார்.
காளை மாடு ஒன்றை அல்லது காளைக் கன்று ஒன்றை எங்கள் குடும்பம் யாரிடம் இருந்தாவது தானமாகப் பெற்றால்தான் என் மகனுக்குப் பெண் கொடுப்பார்கள் என்கிறார் சேட்டு என்கிற பெரு மாள், 38.
தானமாகக் கொடுக்கப்பட்ட காளை மாடுதான் எங்கள் இன ஆண் பிள்ளைகளுக்குப் பெண் கிடைப்பதை உறுதிப்படுத்துகிறது.
இல்லை எனில் எவ்வளவு வயதா னாலும் தனியாக வாழ வேண்டியதுதான் என்று 12 வயது ஆண் பிள்ளைக்குத் தந்தையான சேட்டு கூறியதைக் கேட்டு வியந்தேன்.
உறவினர் வீட்டு தேவைக்காக புதுவை போய்விட்டு, தன் குடும்பம் தற்காலிகமாக வசிக்கும் செம்பொன்னார்கோயில் என்ற ஊருக்குப் போய்க்கொண்டிருந்த சேட்டை மணல்மேடு என்ற ஊரின் கடைத்தெருவில் சந்தித்தேன்.
"சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் ஆந்திராவில் இருந்து நாங்கள் தமிழ்நாட்டிற்கு வந்து பல பகுதி களிலும் கொத்துக்கொத்தாகக் குடியேறினோம்.
"தெலுங்கும் தமிழும் கலந்து பேசும் எங்களிடையே பல பிரிவுகள் உண்டு. நாங்கள் ஆதியன் என்ற பிரிவைச் சேர்ந்த பூம் பூம் மாட்டுக்காரர்கள். காளை மாடுதான் எங்கள் குலதெய்வம்.
"எங்கள் பாரம்பரியத்தில் குடும்பத்தில் பெண் குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டம். பெண் குழந்தை பெற்றவர்களுக்குக் கடைசி வரை ஒரு செலவும் கிடையாது. அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு கடைசி வரை காப்பாற்ற வேண்டியது ஆண் மகன் கடமை.
"ஒரு பையனுக்குத் திருமணம் ஆக வேண்டுமானால் அந்தப் பையனிடம் ஒரு பூம் பூம் காளை மாடு இருக்க வேண்டும். அந்த மாடு யாராவது தானம் கொடுத்த மாடாக இருக்க வேண்டும். பணம் கொடுத்து வாங்கிய மாடாக இருக்கக்கூடாது.
"ஒரு காளை மாட்டை பராமரித்து அதை வைத்துப் பிழைக்க முடியும் என்றால், ஓர் ஆண் பிள்ளை ஒரு பெண்ணை கடைசி வரை வைத்து காப்பாற்றிவிட முடியும் என்பது எங்கள் இனத்தவரிடையே நிலவும் அசைக்க முடியாத நம்பிக்கை.
"என்னிடம் தானமாக கொடுக்கப்பட்ட ஒரு பூம் பூம் மாடு இருந்தது. அதை வைத்து பிழைப்பு நடத்தி வந்தேன். அதை நம்பி எனக்குப் பெண் கொடுத்தார்கள். கல்யாணி என் மனைவியின் பெயர்.
"எங்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உண்டு. என் 12 வயது பையனுக்காக ஒரு காளை மாட்டை தானமாகப் பெற நான் நடையாய் நடக்கிறேன். இப்போதெல்லாம் காளை மாட்டை தானம் கொடுக்க யாரும் முன்வருவதில்லை. பூம் பூம் மாடும் குறைந்துவிட்டது.
"வெறும் மேளத்தை வைத்துகொண்டுதான் ஊர் ஊராக, வீதி வீதியாக, கடை கடையாக, வீடு வீடாகச் சென்று யாசகம் கேட்டு பிழைக்கிறோம். நாளுக்கு ரூ.200 ரூ.300 கிடைக்கும்.
"என் பிள்ளைகளும் என் மனைவியும் அதிகாலையிலேயே கிளம்பி பல ஊர்களுக்கும் சென்று ஊசி, பாசி மணிகள், திருஷ்டி பொம்மை கள் முதலானவற்றை விற்று வீடு திரும்புவார்கள். அதிகாலை ஐந்து மணிக்கு வீட்டைவிட்டு புறப்படும் நாங்கள் பிற்பகல் மூன்று மணியளவில்தான் வீடு திரும்புவோம்.
"பொதுவாக எங்கள் இனத்தவர்கள் ஓர் இடத்தில் நிரந்தரமாக வசிப்பதில்லை. இடவசதி, கால நிலவரங்களுக்கேற்ப பல இடங்களுக்கும் மாறிமாறிச் சென்று வசித்து வருகிறோம்.
"பூம் பூம் மாடு இருக்கும்போது நாங்கள் குறி சொல்வோம். ஒரு வீட்டிற்குச் சென்று அந்த வீட்டில் நல்லது நடக்குமாடா என்று மாட்டைப் பார்த்து கேட்போம்.
"நடக்கும் என்று மாடு தலையாட்டும். அதைப் பார்த்து அந்த வீட்டில் உள்ளவர்கள் மகிழ்ச்சிஅடைந்து காசு பணம் கொடுப்பார்கள். பழைய துணிமணிகளைக் கொடுப்பார்கள். சாப்பாடு போடுவார்கள். இப்போது பூம் பூம் மாடு இல்லை. ஆகையால், குறி சொல்வதை நிறுத்திவிட்டோம். வெறும் மேளம்தான் இப்போது எங்களுக்குக் கைகொடுக்கிறது.
"அரசாங்கத்தின் உதவியால் எங்கள் பிள்ளைகளில் ஒரு சிலர் ஏதோ ஓரளவுக்குப் படித்து வருகிறார்கள். பிழைப்பது சிரமமாகிவிட்டது என்பதால், எங்கள் பிள்ளைகள், பிளாஸ்டிக் பொருள்விற்பது, எரிவாயு அடுப்பு பழுதுபார்ப்பது போன்ற சிறுசிறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
"பூம் பூம் மாடு வைத்திருப்போரிடம் தோலால் செய்யப்பட்ட இரு பக்கம் அடிக்கும் உறுமி போன்ற மேளம் இருக்கும். அதுதான் பூம் பூம் என்ற சத்தத்தை ஏற்படுத்தும்.
"ஆனால் இப்போது என் போன்றோரிடம் மாடு இல்லை என்பதால் நாங்கள் வெறும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட மேளத்தை வைத்து பிழைக்கிறோம்," என்று கூறிய சேட்டு, மணல்மேடு கடைத்தெருவில் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி பெருமாள் அருள் புரிவார், கோவிந்தன் அருள் புரிவார் என்று சொல்லி மேளத்தை அடிக்கிறார்.
சிலர் காசு போடுகிறார்கள். சிலர் இல்லை என்று கூறிவிடுகிறார்கள்.
சேட்டு எதற்கும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
சேட்டு தொடர்ந்தார், "தலைப்பாகை, மஞ்சள் குங்கு மம் பாசிமணிகளுடன் அலங்காரமாக கடைத்தெருவில் வலம் வரும் நான், வேலை முடிந்ததும் ஒதுக்குப் புறமாகச் சென்று இந்த வேடத்தைக் களைத்துவிட்டு வழக்கமான உடையை அணிந்துகொண்டு பேருந்து ஏறி வீட்டுக்கு சென்றுவிடுவேன்," என்றார் சேட்டு.
அப்படி சேட்டு கூறியதை தலையை ஆட்டியபடி நான் கேட்டுக்கொண்டு இருந்ததை அப்போது அங்கு வந்த என் நண்பர் பார்த்தார். 'என்ன அவர் (சேட்டு) சொல் வதைக் கேட்டு பூம் பூம் மாடு தலையாட்டுவதைப் போல் தலையை ஆட்டுகிறீர்கள்' என்று என்னைப் பார்த்து நண்பர் கேட்டார்.
ஒருவர் பேசுவதைக் கேட்கும் மற்றொருவர் பதில் சொல்லாமல் தலையை தலையை ஆட்டினால் பூம பூம் மாடு போல் தலையை ஆட்டுகிறீர்கள் என்று கேட்பது வழக்கம். அந்த அளவுக்கு இந்திய பாரம்பரியத்தில் தனிச்சிறப்புமிக்க இடம்பிடித்துள்ளது பூம் பூம் மாடு கலாசாரம். ஆனால் பூம் பூம் மாடும் அந்தக் கலாசாரமும் இப்போது மிகவும் அரிதாகிவிட்டதே என்று கவலையுடன், சேட்டு அடுத்த கடைக்குச் சென்றதைப் பார்த்த நான், அப்படியே அந்தக் கால நினைவில் மூழ்கிப்போனேன்.
சிறுவயதில் பார்த்த பூம் பூம் மாடு மனதில் நிழலாடியது. பூம் பூம் மாடு மறைந்து வருகிறது. என்றாலும் அதோ, எங்கோ ஒரு கடையில் சேட்டு அடிக்கும் மேளச் சத்தம் என் காதில் கேட்கிறது.
அந்தச் சத்தம் முன்பு கேட்ட பூம் பூம் சத்தம் போல் இல்லை. என்ன செய்வது? காலம் மாறிவிட்டது. ஆலை இல்லாத ஊருக்கு இளுப்பைப் பூதானே சர்க்கரை?