கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியக் காடுகளில் சிறுத்தைகள் இன்று மீண்டும் வலம் வந்தன.
சிங்கங்கள், புலிகள் போன்ற பெரும்பூனைகளுடன் சீத்தா எனும் சிறுத்தைகளும் இந்தியாவின் தொன்மையான வேதங்களிலும் குகை ஓவியங்களிலும் தோன்றியுள்ளன. முகல் காலத்து மன்னர் அக்பர் 1,000 சிறுத்தைகளை வைத்திருந்தாராம்.
ஆனால் காலவோட்டத்தில் அந்த இனமே முற்றிலும் அழிந்துபோயின. தற்போது அந்நிலை மாறியுள்ளது.
தென்மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நமீபியா நாட்டில் இருந்து இன்று(செப்டம்பர் 17) 8 ‘சீத்தா’ வகை சிறுத்தைகள் சரக்கு விமானத்தின் மூலம் மத்திய பிரதேசத்தின் குவாலியர் கொண்டு வரப்பட்டன.
இந்த சிறுத்தைகளை இந்தியப் பிரதமர் மோடி தனது பிறந்தநாளையொட்டி குனோ தேசிய பூங்காவில் விடுவித்தார்.
இந்திய காடுகளில் மீண்டும் சிறுத்தைகளை வாழவைக்கும் முயற்சியாக 5 பெண் சிறுத்தைகள், 3 ஆண் சிறுத்தைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
தனது பிறந்த நாளன்று அவர் பெரும்பாலும் தனது தாயாரைச் சந்திப்பார். கடந்த ஆண்டுகளில் இதே நாளில் அவர் சர்தார் சரோவர் அணை போன்ற முக்கியமான இடங்களைப் பார்வையிட்டுள்ளார். 1965இல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போர் குறித்த போர்க் கண்காட்சியை திறந்துவைத்துள்ளார். தூய்மை தினத்தை துவக்கி வைத்துள்ளார் அல்லது பள்ளி மாணவர்களுடன் தனது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார்.
இந்த முறை இந்தியாவிற்கு சிறுத்தைகளைத் திரும்பிக் கொண்டுவருவதில் கவனம் செலுத்தியுள்ளார் திரு மோடி.