சனிக்கிழமை ஒரு சாமானியர்
முளைக்கீரையை 15 முதல் 20 நாள்களில் பறிக்கலாம். இது 15 நாள் கீரை என்று தன் தலையில் கூடையில் இருந்த கீரையைப் பற்றி கூறினார் திருவாட்டி ராஜாத்தி.
கீரை, கீரை என்று சாலையில் சத்தம் கேட்டாலே போதும். பலருக்கும் திருவாட்டி ராஜாத்தி வந்துவிட்டார் என்பது தெரிந்துவிடும்.
தலையில் மூங்கில் கூடை, அதன் உள்ளே கீரைக்கட்டுகள், காய்கறிகள் சகிதம் வீட்டுக்கு வீடு கீரை கீரை என்று குரல் கொடுத்துக்கொண்டே நடந்து செல்லும் அந்த 62 வயது மூதாட்டி ஓரளவுக்குப் பிரபலமானவர்.
மன்னம்பந்தல் என்ற பேரூரைச் சேர்ந்த அந்த மாதுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். பத்து ஆண்டுகளுக்கு முன்பே கணவர் இறந்துவிட்டார்.
ஒரு மகனுக்கும் மகளுக்கும் திருமணம் ஆகி வேறு இடங்களில் வசிக்கிறார்கள். கடைசி மகனுக்கு வயது 35 ஆகியும் பெண் கிடைக்கவில்லை. திருமணம் ஆகவில்லை.
“எனக்குத் தெரிந்தது கீரை, காய்கறி, வியாபாரம்தான். வேறு வழியில்லை.
“கீரை முளைக்கும் பருவத்தில் அன்றாடம் பிற்பகல் நேரத்தில் கீரை கொல்லைக்குப் போய் நானே கீரை பறிப்பேன். முதலாளியும் இருப்பார். 40 கட்டுகள் வரை பறிப்பேன்.
“முளைக்கீரை என்றால், விதை தெளித்த பிறகு 15 முதல் 20 நாள்களில் பறிக்கலாம்.
“உரிமையாளரிடம் கணக்கு சொல்லிவிட்டு, கீரையுடன் வீட்டுக்குச் சென்று கீரையைத் தண்ணீரில் அலசி ஈரத்துணியில் மூடி வைத்துவிடவேண்டும்.
“இல்லை எனில் காலையில் கீரை துவண்டுவிடும். யாரும் வாங்கமாட்டார்கள். கைப்பிடி அளவுக்கு ஒரு கட்டு கீரை ரூ.10க்கு வாங்குவேன். ரூ. 20க்கு விற்கிறேன். அடுத்த நாள்தான் முதலாளிக்குப் பணத்தைக் கொடுப்பேன்.
“கீரையை வீட்டில் பங்கீடு செய்துவிட்டு, காய்கறி பயிரிடுவோரிடம் சென்று கத்தரி, வெண்டை, பீர்க்கை, நார்த்தை, எலுமிச்சை, பம்பளிமாஸ், நெல்லிக்காய் உள்ளிட்ட பலவற்றையும் எடைக்கு அல்லது உருப்படி கணக்கில் வாங்கி அவற்றையும் வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்க்க பொழுது போய்விடும்.
“சமையல் வேலை, சாப்பாட்டை முடித்துக்கொண்டு இரவு 9 மணிக்குப் படுத்துவிடுவேன். என் கணவர் வாங்கி வைத்த குடிசை வீடு இருக்கிறது. அதில்தான் வாழ்கிறேன்.
“அதிகாலை 5 மணிக்கு எழுந்துவிடுவேன். இருந்தால் நீராகாரம் குடிப்பேன். இல்லை எனில் வழியில் தேநீர் குடித்துக் கொள்ளலாம் என்று கிளம்பிவிடுவேன்.
“கீரை, காற்கறிகளை மூங்கில் கூடையில் வைத்து, அவற்றை ஈரத்துணியால் மூடி, தலையில் சும்மாடு வைத்து, அதன் மேல் கூடையைத் தூக்கி வைத்ததும் என் கால்கள் நடக்கத் தொடங்கிவிடும்.
“தலையில் கூடையின் எடை அதில் உள்ளவற்றைப் பொறுத்து சுமார் 25 கிலோ எடை வரை இருக்கும். வெறும் கீரை மட்டும்தான் என்றால் 10 கிலோ எடையைச் சுமக்கவேண்டும். காய்கறிகளும் இருந்தால் 25 கிலோ வரை தலை சுமக்கும். தெருத் தெருவாக நடப்பேன்.
“கொல்லையில் பார்த்து பார்த்து நானே பறிப்பதால் கீரை பூச்சி இல்லாமல் சுத்தமாக இருக்கும். ஆகையால் என்னிடம் கீரை வாங்க பலரும் விரும்புவார்கள்.
“விற்பதற்கு ஏற்ப நடக்க வேண்டும். சில நாட்களில் கிடுகிடுவென விற்று விடும். சில நாள்கள் மந்தமாக இருக்கும். சராசரியாக 10 கி.மீ. நடப்பேன்.
“முளைக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, மணத்தக்காளிக் கீரை முருங்கைக் கீரை, அரைக்கீரை, பசலைக்கீரை, புளிச்சக் கீரை எனப் பலவற்றையும் எடுத்து வந்து கேட்பவர்களுக்குக் கொடுப்பேன்.
‘‘சில நேரங்களில் தேங்காய்களையும் விற்பேன். வீட்டுக்குப் போய்ச் சேரும்போது மணி பிற்பகல் 2 ஆகிவிடும். நடுவே கடையில் தேநீர் குடிப்பேன். சில நாள்களில் காலையில் நான்கு இட்லி சாப்பிடுவேன்.
“கீரை விற்காமல் மீந்துவிட்டால், புண்ணியமாவது கிடைக்கட்டும் என்று கோயில் யானைக்குக் கொடுத்துவிடுவேன். அது தின்றுவிடும். கூட்டிக் கழித்துப் பார்த்தால் நாள் ஒன்றுக்கு ரூ.100 முதல் ரூ.150 வரை கிடைக்கும்.
“வீட்டுக்குக் கீற்று போடுவது, உடல்நிலை சரியில்லாமல் போவது போன்றவற்றைச் சமாளிக்க மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வட்டிக்குக் கடன் வாங்க வேண்டிய நிலை வரும். ரூ.3,000 வரை வாங்கி நாளுக்கு ரூ.100 வீதம் கொடுத்து அடைப்பேன். கடனைக் கட்டி முடித்ததும் மீண்டும் கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படும்.
“என்னுடன் வசிக்கும் என் கடைசி மகனுக்குப் பெண் கிடைக்கவில்லை. அதுவே அவனுக்குக் கவலை. எனக்கும் கவலை,” என்றார் திருவாட்டி ராஜாத்தி.
இந்த மாதை மயிலாடுதுறை வீதி ஒன்றில் சந்தித்தபோது, “வாழ்க்கையே சுமைதான் என்று அவர் கூறினார்.
‘‘பலருக்கும் வாழ்க்கை வாழ்வதற்காக அமைந்து விடுகிறது. ஆனால், என்னைப் பொறுத்தவரை ஒருபுறம் நெஞ்சில் சுமை, மறுபுறம் தலையில் சுமை என்று என் வாழ்க்கையே சுமையாகிவிட்டது.
‘‘என் பிள்ளைகள் எல்லாம் சம்பாதித்துத் தரும் அளவிற்கு அவ்வளவு வசதியாக இல்லை. ஆகையால், கடைசி வரை உழைத்துப் பிழைக்க வேண்டிய நிலையில்தான் இருக்கிறேன்.இதற்காக நான் ஒரு நாளும் கவலைப்படுவதில்லை. கவலைப்படப் போவதும் இல்லை.
“என் மனச் சுமையை ஒப்பிடும்போது, தலைச் சுமை எனக்கு ஒரு சுமையாகவே தெரியவில்லை. அது சுகமான சுமையாகிவிட்டது,” என்று சொல்லியபடியே, கீரை கீரை எனக் கூவியபடியே நகர்ந்தார் அந்த மாது.
அவர் போனதையே பார்த்துக் கொண்டிருந்த எனக்கு, உழைத்துப் பிழைப்பதை நோக்கமாகக்கொண்ட அந்த மாது, உண்மையிலேயே பெயருக்குத் தகுந்தாற்போல் ராஜாத்திதான் என்ற எண்ணம்தான் ஏற்பட்டது.
நாள்தோறும் சுமார் 25 கிலோ எடையுடன் சராசரியாக 10 கி.மீ. நடக்கிறேன். நாள் ஒன்றுக்கு ரூ.100 முதல் ரூ.150 வரை கிடைக்கும். இப்போதெல்லாம் நான் சுமக்கும் சுமை, சுகமான சுமையாகிவிட்டது.