சனிக்கிழமை ஒரு சாமானியர்
ஒரே ஒருமுறை ரூ.500 முதல் போட்டு ஒவ்வொரு நாளும் சராசரியாக ரூ.500 சம்பாதிக்கிறேன் என்கிறார் சாலையோர முதலாளி சிங்காரவேலு, 68.
“என்னுடைய முதலீடே ஒரு ரம்பம், ஓர் உளிதான். பரபரப்பான கடைத்தெரு ஓரமாகத்தான் எனது தொழிற்சாலை. போவோர் வருவோர்தான் எனது சந்தை.
“கடந்த 30 ஆண்டுகாலமாக இந்தத் தொழிலை நடத்தி வருகிறேன்,” என்று ஈருளி தயாரித்து விற்கும் திரு சிங்காரவேலு சொன்னதைக் கேட்டு கொஞ்சம் வியப்பாகத்தான் இருந்தது.
மயிலாடுதுறையில் பிறந்து, வளர்ந்து, காத்தாயி, 60, என்ற உறவுக்காரப் பெண்ணை மணந்து, நான்கு ஆண் பிள்ளைகள், இரண்டு பெண் பிள்ளைகளைப் பெற்றெடுத்து, எல்லாருக்கும் மணமுடித்து வெளியூர்களுக்கு அனுப்பிவிட்டு, தன் மனைவியுடன் ஒரு குடிசை வீட்டில் வசிக்கும் இந்த முதலாளி, “பெண்களின் தலையில் வாழும் ஈரும் பேனும்தான் எங்களுக்குச் சோறு போடுகின்றன,” என்றார்.
திரு சிங்காரவேலு தம்பதியர் படிக்காதவர்கள். மயிலாடுதுறையில் பொது மருத்துவமனை சாலை ஓரமாக மண்தரையில், மர நிழலில் இத்தம்பதியைக் காணலாம்.
‘ஈர் உருவி’ என்பதே மருவி 'ஈருளி' என்று வழங்கப்படுகிறது. திருமண சீர்வரிசையில்கூட ஈருளி இடம்பெற்று இருக்கும். ஈருளிக்கு நறுவலி என்ற மரக்கட்டைதான் மிகவும் சிறந்தது.
“ஆனால், நறுவலி மரம் இப்போது கிடைப்பதில்லை. ஆகையால், பூவரசு, தேக்கு, வேம்பு, சவுக்கு மரக்கட்டைகளில் இருந்து ஈருளி செய்கிறோம்.
“மரவாடிகளில் (மரக்கடைகளில்) ஒதுக்கப்படும் இத்தகைய கட்டைகளை எடுத்து வருவேன். அவற்றை உளியால் நானும் மனைவியும் ஈருளி வடிவத்திற்குச் சீவிக்கொள்வோம்.
பிறகு ரம்பத்தால் அறுத்து ஏழு பற்கள், ஒன்பது பற்கள் கொண்ட ஈருளிகளைச் செய்வோம். உப்புத்தாளைப் போட்டு தேய்த்து வழவழப்பாக்கி விற்போம். ஏழு பல் ஈருளி ரூ.50க்கும் ஒன்பது பல் பெரிய ஈருளியை ரூ.100க்கும் விற்கிறோம்.
“ஒரு நாளைக்கு சராசரியாக 10 ஈருளி விற்கும். திருவிழாக் காலம் என்றால் ரூ.1,500க்குக் கூட விற்பனையாகும். மழைக்காலங்களில் பல இடங்களுக்கும் சென்று ஈருளி விற்பேன். சில கடைகளில் கேட்டாலும் கொடுப்பேன். ஈருளியின் அடிப்பகுதி தலைமுடி சிக்கலை எடுக்க உதவும்,” என்று சிங்காரவேலு தம்பதியர் கூறினர்.
நான் அவர்களுடன் கிட்டத்தட்ட அரைமணி நேரம் இருந்தேன். அப்போது இரண்டு பேர் ஈருளி வாங்க வந்தார்கள். ஒருவர் ரூ.50 கொடுத்து சிறிய ஈருளி வாங்கினார். மற்றொருவர் வாங்காமல் சென்றுவிட்டார்.
'ஈரும் பேனும் வர இதுதான் காரணம்'
“பொதுவாக பெண்களுக்குத் தலையில் ஈரும் பேனும் வருவதற்குக் காரணம் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவிகளுடன் அவர்கள் நெருங்கிப் பழகுவதுதான். ஒருவரின் சீப்பு, தொப்பியை மற்றொருவர் பயன்படுத்தும்போதும் கட்டிப்பிடித்து விளையாடும்போதும் பேன் பரவ வாய்ப்புண்டு.
“சிலர் தலைமுடியைச் சரியாகப் பராமரிக்காமல் சிக்குப்பிடித்துப் போகும் அளவுக்கு வைத்திருப்பார்கள். அத்தகைய நிலையிலும் பேன் பெருகுவதுண்டு.
“காய்ச்சல் காரணமாக சில மருத்துவமனைப் படுக்கையில் பல நாள்கள் இருக்கும் நோயாளிகளின் தலையில் பேன் பெருகிவிடும். மருத்துவமனைக்கு வந்து செல்வோரில் சிலர்கூட என்னிடம் இருந்து ஈருளி வாங்கிச் செல்வதுண்டு.
“இப்போது தலைமுடியைச் சுத்தம் செய்ய நவீன பொருள்கள் எவ்வளவோ வந்துவிட்டன. இருந்தாலும்கூட எங்கள் ஈருளிக்கு ஏதோ கொஞ்சம் தேவை இருந்துகொண்டுதான் இருக்கிறது.
“எங்களுடைய எஞ்சிய காலமும் இதிலேயே கழிந்துவிடும்,” என்கிறார் திரு சிங்காரவேலு.
“வயலில் விளையும் நெல் சோறு போடுவதைப்போல் தலையில் விளையும் ஈரும் பேனும்தான் எங்களுக்குச் சோறு போடுகின்றன.
“தலைமுடியைச் சரியாகப் பராமரிக்காவிட்டால் ஈரும் பேனும் புழுத்துவிடும். உடலில் உள்ள ரத்தத்தை உறிஞ்சி பேன் கொழுத்துவிடும். அரிப்பாய் அரிக்கும்.
“ஏழு பாய்களைத் தாண்டியும் பேன் பரவும். மூட்டைப்பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்திய கதையாக ஈரையும் பேனையும் வளர விட்டுவிட்டால் தலையை மொட்டை அடிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.
“அப்படி ஒருநிலை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதையும் மீறி ஈரும் பேனும் வந்துவிட்டால் இருக்கவே இருக்கிறது எங்கள் ஈருளி,” என சிரித்துக்கொண்டே கூறினார் திருமதி காத்தாயி.