பெங்களூரு: விண்வெளியில் இருந்தவாறு சூரியனை ஆய்வு செய்ய இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வகமான ஆதித்யா-எல்1, சனிக்கிழமை (செப்.2) 11:50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவ திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
அதற்கான கடைசி 24 மணி நேர புறப்பாட்டு ஆயத்தம் (கவுண்ட்டவுன்) வெள்ளிக்கிழமை தொடங்கியது.
சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து, மக்களின் நாட்டம் ஆதித்யா எல்-1ன் மீது குவிந்துள்ளது.
இந்த விண்கலம் விண்வெளியில், பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள ‘லக்ராஞ்ச் புள்ளி எல்-1’ என்னும் இடத்தில்தான் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.
சூரியன்-பூமி அமைப்பில் சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாக்ரேஞ்ச் புள்ளி 1 (எல் 1)-ஐ சுற்றி ஒரு ஒளிவட்டப் பாதையில் ஆய்வகம் வைக்கப்படும் என்றும் அந்தப் புள்ளியை விண்கலம் அடைய 120 நாட்களுக்கு மேல் ஆகும் என்றும் இஸ்ரோ முன்னதாகத் தெரிவித்துள்ளது.
தடையின்றி தொடர்ந்து சூரியனைப் பார்க்கும் வகையில் ஆய்வகம் அமைக்கப்பட உள்ளதால் அது சூரியனைப் பற்றி தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.