புதுடெல்லி: அனைத்துலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றியமைத்து வந்தன.
ஆனால் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்து வந்தது.
இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு வியாழக்கிழமை மாலை அதிரடியாகக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.2 குறைக்கப்பட்டது. இந்த அறிவிப்பை மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் தமது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருந்தார்.
இந்த விலை குறைப்பு வெள்ளிக்கிழமை (மார்ச் 15) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. இதன் மூலம் சுமார் 2 ஆண்டுகளுக்குப்பிறகு இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டு உள்ளது.
தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.96.72 ஆக இருந்தது. இது வெள்ளிக்கிழமை முதல் ரூ.94.72 ஆக விற்பனையானது. அதேபோல டீசல் விலையும் ரூ.89.62ல் இருந்து ரூ.87.62 ஆக குறைந்துள்ளது.
சென்னையில் ரூ.102.73 ஆக இருந்த பெட்ரோல் விலை ரூ.100.73க்குக் குறைந்துள்ளது. டீசல் விலை ரூ.94.33ல் இருந்து ரூ.92.33 ஆகக் குறைந்திருக்கிறது.