புதுடெல்லி: தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் பத்து ஆண்டுகளில் இல்லாத வகையில் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளதாக மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவில் 17 விழுக்காடு நீர் மட்டுமே மிச்சம் இருப்பதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நீர் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், “நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களை மத்திய நீர் ஆணையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
இவற்றில் தென்னிந்தியாவில் உள்ள 42 நீர்த்தேக்கங்களின் சராசரி நீர் கொள்ளளவு 53.334 பில்லியன் கன மீட்டர் (பிசிஎம்) ஆகும்.
அண்மைய ஆய்வு முடிவின்படி தென்னிந்திய நீர்த்தேக்கங்களில் தற்போது 8.865 பில்லியன் கன மீட்டர் அளவுக்கான தண்ணீர் மட்டுமே உள்ளது. இது நீர்த்தேக்கத்தின் கொள்ளளவில் 17 விழுக்காடாகும் என்று ஆணையம் அந்த அறிக்கையில் கூறியுள்ளது.
இதற்குக் காரணம், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நடப்பாண்டில் போதிய அளவு மழை பொழியவில்லை. இதேபோன்று மகாநதி மற்றும் பெண்ணாறு படுகைகளுக்கு இடையே கிழக்கு நோக்கிப் பாயும் நதிகளிலும் நீர்வரத்து மிகக் குறைவாக உள்ளது.
இந்நிலையில், இப்போது 17 விழுக்காடு மட்டுமே தென்னிந்திய நீர்த்தேக்கங்களில் தண்ணீர் மிச்சம் உள்ளதால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஆகிய மாநிலங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு, வேளாண்மை நீர்ப்பாசன தட்டுப்பாடு மற்றும் நீர் மின் உற்பத்தியில் பின்னடைவு உள்ளிட்டவை ஏற்படும் அபாயம் உள்ளது என்று மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த பத்தாண்டுகளாகத் தென்னிந்திய நீர்த்தேக்கங்களின் கொள்ளளவில் 23 விழுக்காடு தண்ணீர் இருப்பு இருந்தது. அதிலும் கடந்த 2023ஆம் ஆண்டில் 29 விழுக்காடு தண்ணீர் இருப்பு இருந்தது.