ஹைதராபாத்: ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத்திற்கு வருகிற 13ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா கட்சி மற்றும் பா.ஜ.க. கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை புதன்கிழமை வெளியிடப்பட்டது.
இந்தத் தேர்தல் அறிக்கையின் முகப்புப் பக்கத்தில் தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சி தலைவர்கள் புகைப்படம் மட்டுமே இடம்பெற்று இருந்ததாகவும், பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இடம் பெறவில்லை என்றும் கூறப்பட்டது.
மேலும், புதன்கிழமை நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆந்திர மாநில பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளர் சித்தார்த் நாத் சிங் தேர்தல் அறிக்கையை வாங்க மறுத்து விட்டதும் கூட்டணியில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.