குதிரைச் சவாரி செய்து இதம் அடைவது சிகிச்சை முறையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தச் சிகிச்சையின் நற்பலன்களை மெய்நிகர்த் தொழில்நுட்பம் மூலம் நீட்டிக்க ‘ஈக்குவல் ஆர்க்’ (EQUAL-ARK) என்ற விலங்குசார் கல்வி நிலையம் முனைகிறது.
முற்றிலும் குதிரையை ஒத்த தோற்றம், அதன் கனைப்புச் சத்தம் என மெய்நிகர் வாயிலாக ஒருவர் குதிரைக் கொட்டகைக்குள் இருப்பது போன்ற உணர்வைப் பெறலாம். பங்கேற்பாளர்கள் எங்கு இருந்தாலும் ‘அட் ஹோம் வித் ஹார்சஸ்’ என்ற இந்தத் திட்டத்தில் இணையலாம்.
‘மெட்டாவர்ஸ்’ ஊடகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தளம், ‘ஸ்டார்ஹப்’ தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை (ஜூன் 24) நடைபெற்ற ரோட்டரி மன்றத்தின் தலைவர் மற்றும் நிர்வாக சபையினரின் பதவியேற்பு விழாவில் இந்தத் திட்டம் அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டது.
மனநல பாதிப்பு, மனப்பதற்றம் ஆகியவற்றால் துன்பப்படும் பிள்ளைகளுக்கு இந்த மெய்நிகர் குதிரைச்சவாரி சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. பாதுகாப்பான சூழலில் பிள்ளைகள் தங்கள் புலன்களை முழுமையாக ஈடுபடுத்தி இதமும் மகிழ்ச்சியும் அளிக்க இந்த மெய்நிகர் தொழில்நுட்பம் முற்படுகிறது.
உண்மையான குதிரைகளின்மீது ஏறி சவாரி செய்வதற்கு முன்பு, அதற்கு நிகரான அனுபவத்தை மெய்நிகர்ச் சூழலில் பெறலாம் என்கின்றனர் இத்திட்டத்தை உருவாக்கியவர்கள்.
“வழக்கமாக நடத்தப்படும் குதிரைச் சவாரி சிகிச்சைகளுக்கு கட்டுப்பாடுகள் உள்ளன. குதிரைக் கொட்டகைக்கு வந்துதான் அந்தச் சிகிச்சையை ஒருவர் மேற்கொள்ள இயலும். ஆனால் மெய்நிகர்ச் சவாரி அப்படிப் போன்றதன்று,“ என்று ‘ஈக்குவல் ஆர்க்’ அமைப்பு தெரிவித்தது.
இந்தத் திட்டத்தின் பாதுகாப்பு அம்சங்கள் நன்கு ஆராயப்பட்டுள்ளதாக ‘ஈக்குவல் ஆர்க்’ கூறியது. நடவடிக்கையின் கடின நிலையை பயிற்றுவிப்பாளர்கள் மெய்நிகரில் எளிதில் கட்டுப்படுத்த முடியும்.
சென் சூ லான் மெத்தடிஸ்ட் சிறார் இல்லத்தில் இந்தத் திட்டம் சோதனை செய்யப்பட்டு பின்னர் மேலும் மதிப்பிடப்படும். ஓராண்டுக்கு நீடிக்கவுள்ள இத்திட்டத்தில் 60 முதல் 70 பிள்ளைகள் வரை இணைவர்.
தனிப்பட்ட வளர்ச்சி, தன்னம்பிக்கை மேம்பாடு, உரிமையுடன் இருக்கும் உணர்வு போன்ற பண்புகளைத் திட்டத்தில் பங்கேற்கும் பிள்ளைகள் வளர்க்க முடியும் என்று ஏற்பாட்டாளர்கள் நம்புகின்றனர்.